Wednesday, March 11, 2015

பிரின்சிபால் மேடம் !

ரொம்ப நாள் ஆச்சு, ஜாலியா ஒரு போஸ்ட் போட்டு... அதான் இன்னைக்கு பாதி தூக்கத்துலேயே எழுந்து ஒரு முக்கியமான விஷயத்தோட கலமிறங்கிட்டேன்...!
என்னடா புள்ள முக்கியமான விஷயம்ன்னு சொல்லுதே, இப்படி பில்ட் அப் பண்ற அளவுக்கு என்னடா விஷயம்ன்னு தான யோசிக்கிறிங்க.
அதாவது... நான்... இன்னைக்கு... எங்க ஊரு ஸ்கூலுக்கே  "பிரின்சிபாலா" பதவி ஏத்துகிட்டேன்.
எப்படிடா இது? அம்மணிக்கு அம்புட்டு அறிவா? எப்படி சாதியம்ன்னு தான வியக்குறிங்க!.
நடந்தத அப்படியே சொல்றேன் கேளுங்க...
இன்னைக்கு காலையில எங்க primary schoolலுக்கு போயிருக்கேன் (ஆனா நான் எதுக்காக, எப்படி, எங்க பள்ளிக்கூடத்துக்கு போனேன்னு இன்னும் சரியா விளங்க மாட்டேன்குது). நிறையா டீச்சர்ஸ் எல்லாம் ஆங்காங்கே நின்னு ஏதேதோ பேசிட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் HM (Head Master) ரூம எட்டிப் பாக்கறேன், திடிர்ன்னு என்னைக் கூப்பிட்டு "நீங்கதான் இனிமே இந்த ஸ்கூல control பண்ண போறீங்க, இன்னியில இருந்து நீங்கதான் நம்ம ஸ்கூலுக்கு பிரின்சிபால்"ன்னு சொல்றார். நான் அப்படியே "ஷாக்" ஆய்ட்டேன்.
ரூம விட்டு வெளிய வந்து குட்டி குட்டி புள்ளைங்களப் பாக்கறேன், என்னைப் பார்த்து அப்படியே சின்னதா smile பண்ணுதுங்க. அப்புறம், கொஞ்ச நேரத்துல புள்ளைங்க எல்லாரும் ஒரு பெரிய ஹால்ல கூடி இருக்காங்க, என்னைப்  பிரின்சிபாலா எல்லோருக்கும் stage ல announce பண்ணப் போறாங்களாம் !?
மேடையில நம்மல எதாவது பேச சொல்வாங்களோ?? யோசிச்சிட்டே ஓரமாப் போய் ஒத்திகை பாக்கறேன்.
மேடையில பேரை அறிவிச்சதும் மைக்கை கையில பிடிக்கறேன். எல்லோரும் புதுப் பிரின்சிபால் "அமெரிக்கன் இங்கிலீஷ்ல" பேசப் போறாங்களோன்னு, என் முகத்தையே பாக்கறாங்க. கதையில இங்கதான்  வைக்கறேன் ட்விஸ்ட். அப்படியே அழகானத் "தமிழ்"ல பேச ஆரம்பிக்கிறேன்.
எடுத்ததும் "என்னடா பிள்ளைகளா, புது பிரின்சிபால் எப்படி இருப்பாங்களோன்னு பயப்படுறிங்களா ?"ன்னு கேட்டுக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு ஏதேதோ பேசறேன் (சூப்பரா தாங்க பேசினேன், இப்ப எழுதறப்போ பேசின dialog எல்லாம் மறந்து போச்சு. :-( ).
கடைசியா யாருமே பேசாத அளவுக்கு சூப்பர் "பஞ்ச்" ஒன்னு பேசறன் பாருங்க... அப்படியொரு கைத்தட்டல் !!
"பெத்தவங்க எதுக்காகத் தெரியுமா பசங்கள இவ்வளோ செலவுப் பண்ணி படிக்க வைக்கறாங்க? அவங்க நல்லா இருக்கணுமுன்னா? சொல்லுங்க... பசங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னுதான. நீங்க படிச்சா உங்க வாழ்க்கைதான் மாறும். மேலே ஏறும். உங்க பெத்தவங்க எதிர் பாக்கறது கடைசி காலத்துல நீங்க போடுற கொஞ்ச சோறு! அவ்ளோதான்."
(இதத்தான் (இதல்லாம் ஒரு பஞ்ச்ன்னு...)  நான் பேசினேனான்னு எனக்கே இப்ப சந்தேகமா இருக்குங்க (பவர் ஸ்டார் கூட இவ்ளோ கேவலமான ஒரு பஞ்ச பேசி இருக்கமாட்டார்). இதுக்கா அப்படி கைத்தட்டினாங்க?! நல்லவேலை! சின்னப் பசங்கன்றதுனால, புரியாம, பாவம் கைத்தட்டலன்னா நாளைக்கு "மேடம்" (நான்தான் ! ) அடிப்பாங்களோன்னு நினைச்சி கைய தட்டிபுட்டாங்க போல!? )
அதுக்கு மேல என்ன நடந்துச்சி, நான் அந்த stageஅ விட்டு இறங்கினேனா (அதுவும் அப்படி ஒரு பஞ்ச பேசிட்டு...), பிரின்சிபாலா இருந்து சாதாரண ஸ்கூல CBSC (இன்டர்நேஷனல் லெவல்) ஸ்கூலா மாத்தினேனான்னு தெரியறதுக்குள்ள, என் வாண்டுப் பையன் "வீல் வீல்"ன்னு கத்தி வெச்சி, என் பிரின்சிபால் கனவுக்கு வேட்டு வெச்சிட்டான். :-(
என் பிரின்சிபால் கனவு நனவாகறதுக்கு முன்னாடியே, கத்தி அழுது, என் பொன்னான கனவைக் கலைச்ச இவனுக்கெல்லாம், என்னை மாதிரியே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் "பிரின்சிபாலா" வரனும், வெச்சு வெளுவெளுன்னு வெளுக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு, அடுத்ததா "டாக்டர் சரண்யாவா, இல்ல IAS சரண்யாவா"ன்னு  என் மூளை இப்போ discussion ல இறங்கி இருக்குது. என்ன இப்ப, ரெண்டுமே நமக்கு ரொம்ப சுலபம் தான !! :-)
சரிங்க மறுபடியும், அடுத்த போஸ்ட்ல பாக்கலாம். (தயவு செய்து அடுத்த போஸ்டாவது, இப்படி மொக்க போடாம, ஒழுங்கா எதாவது உருப்படியா போடும்மான்னு நீங்க கடுப்பாவறது என் காதுல கேக்குது, விடுங்க விடுங்க, நான் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...) :-)

Wednesday, January 14, 2015

ஒரு ஹாலிவுட் கனவு - சிறுகதை

"ஏங்க, ப்ளீஸ்... அந்த லேப்டாப்ப மூடிவச்சிட்டு வந்து கொஞ்ச நேரம் எனக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணலாம்ல, இல்லைனா சஞ்சனா குட்டியையாவது பார்த்துக்குங்க... இவளையும் பார்த்துகிட்டு, வர்றவங்களுக்கு எப்படிதான் சமைக்கறது?" என்று கொஞ்சம் அழுத்துக்கொண்டே கேட்டாள் மஹா லக்ஷ்மி.
"கொஞ்சம் பொறு மஹா, நம்ம பிரண்ட்ஸ் கார்த்தியும், ரஞ்சனாவும் வந்துகிட்டிருக்கிற ஹைவேஸ் ரோடுல டிராபிக் எப்படி இருக்குன்னு பார்த்துட்டிருக்கேன். இருட்டுறதுக்குள்ள அவங்க வந்துட்டா பரவாயில்ல, இங்கே நம்ம பகுதியில, கடத்தல், கொள்ளை ரொம்ப அதிகம்ன்னு தெளிவா சொல்லியும் லேட்டா கிளம்பியிருக்காங்க பாரு" என்று கவலையோடு லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்தான் சசி குமரன். 
அவர்கள் வசிப்பது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரத்தில். பெருநகரத்தில் என்றால், அந்நகரத்தை ஒட்டி, கொஞ்சம் தள்ளியிருக்கின்ற கிராமமும் நகரமும் கலந்த ஒரு சிற்றூரில். அங்கே இருக்கும் ஒரு பெரிய மருந்துக் கம்பனியின் IT சாப்ட்வேர் துறையில், ஒரு முக்கியமான ப்ரொஜெக்டில், ஒப்பந்த அடிப்படையில் சாப்ட்வேர் இஞ்சினியராக கடந்த ஆறுமாத காலமாக வேலை பார்க்கிறான் சசி. முதன் முதலில் இன்டெர்வியுக்காக அங்கே வந்தபோதே, அந்த கம்பெனியைச் இருந்த இடத்தை சுற்றிப் பச்சை பசேல் என்று ஒருப்பக்கம் ஊசியிலைக் காடுகளும் மலைகளுமாக, மறுபக்கம், அமைந்திருக்கும் அழகான ஊருமாக, அவன் மனதை நிறைத்துவிட்டது. சாலரி பேக்கேஜும் அவன் எதிர்ப்பார்த்த மாதிரி இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டான். உடனேயே ஒரு கூட்டுக் குடியிருப்பில் வீடு பார்த்து, மனைவியையும் குழந்தையையும் அழைத்து வந்துவிட்டான். அதே  கம்பெனியில் வேலைப் பார்க்கும் இன்னும் பலரும் (பெரும்பாலும் இந்தியர்கள்) அதே குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்ததால் எல்லோரும் நண்பர்களாகிவிட்டார்கள். ஒரு கடைக்கு போவதென்றாலும் நான்கைந்துப் பேராக சேர்ந்துதான் போய் வருவார்கள். அவர்கள் குடி வந்த புதிதில் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.
ஆனால், இவர்களின் குடியிருப்பு ஊரின் கடைசியில் இருப்பதாலும், குடியிருப்பை ஒட்டி, முழுவதும் மலைகாட்டுப்  பகுதியாக இருப்பதாலும், சமீபகாலமாக, அப்பகுதியில் கொள்ளையர்களின் கைங்கர்யம் மிக அதிகமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. ஊரின் ஒதுக்குபுறம் என்பதால் போலீஸ் பாதுக்காப்பு என்பது குறைவுதான். திடீர் திடீர் என்று, இரவு நேரத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் கொள்ளையர்கள் வீடு புகுந்து, ஆட்களை சுட்டுவிட்டு, பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள். அதனால்,  இரவு நேரங்களில் ஆண்கள் பலரும் ஷிப்ட் போட்டு ரோந்து பார்ப்பார்கள். அப்படியும் சில சமயம், ரோந்து பார்ப்பவர்களே கூட (ஒருவர் இருவராக பிரிந்து செல்கையில்) கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டு, சிலர் உயிரையும் விட்டிருக்கிறார்கள். சசியின் ஆயுள் ரேகை கொஞ்சம் கெட்டி போல, இது வரை  எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்திருக்கிறான்.
 இப்படியெல்லாம் திகிலாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வபொழுது மஹா, சஞ்சனா பாப்பாவுடன், அங்கங்கே நின்று, அந்த மலைகளையும் மரங்களையும், அந்த அழகான இடத்தினை போட்டோக்களாகச் சுட்டு, facebookல் ரகம்ரகமாக upload செய்ய, அதைப் பார்த்துவிட்டுதான் கார்த்தியும் ரஞ்சனாவும் இந்த ஒரு வார கால  விடுமுறையை இங்கேதான் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தார்கள். ஆனாலும், சசி அங்கே இருக்கும் பிரச்சனைகளைச் எடுத்துச் சொல்லிப் பார்த்தான் தான். "மச்சான், நானே அக்ரீமெண்ட் முடிஞ்சதும், சீக்கிரம் வேற வேலைப் பார்த்துக் கொண்டு வேற இடத்துக்குப் போயிடலாம்ன்னு இருக்கேன், இந்த இடம் பாதுகாப்பே இல்லாத இடம், சொல்றதக் கேளு"ன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், உண்மையறியும் ஆர்வத்தில் இருவரும் கிளம்பிவிட்டார்கள். பத்து மணி நேரப் பயணத்தில், புதிதாக வாங்கிய வெள்ளை நிற மெர்செடிஸ் பென்ஸ் காரில், பாதி தூரத்திற்கு மேல் கடந்து வந்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மதியம் மணி மூன்று. அவர்களுக்கு வழிகாட்டியான GPS கருவி, சசியின் குடியிருப்பை  அடைய, தோராயமாக 6.15 pm ஆகும் எனக் காட்டியது.
மஹா ஏதோ YouTube videos பார்த்து விதம் விதமாக சமைத்துக்கொண்டிருக்க, சசி, சஞ்சனா குட்டியை தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு நண்பரைப் பார்க்கக் கிளம்பினான். அவர்களின் குடியிருப்பு கொஞ்சம் வித்யாசமாகவும், விஸ்தாரமாகவும் இருந்தது. அப்பகுதி ஒரு பரந்து விரிந்த இடம் என்பதாலோ என்னவோ, அந்த குடியிருப்பில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு தனி வீடு போல, தனித்தனி கேட் அமைப்போடு கட்டியிருந்தார்கள், அத்தோடு அல்லாமல், மொத்தமாக அந்தக் குடியிருப்பைச் சுற்றி பெரிய மதில் சுவரோடுக் கூடிய இரண்டு வாயில்கள் இருந்தது. இத்தனை வாயில்கள் இருந்தும், பாதுகாப்பிற்கு ஒரு செக்யூரிட்டி இல்லாமல் போனதுதான் துரதிஷ்டவசம். இருந்த ஒரு செக்யூரிட்டியும் இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு கொள்ளைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
இப்போது மணி 5.30. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்துவிடுவோம் என மெசேஜ் அனுப்பினாள் ரஞ்சனா.
"ஹே கார்த்தி, நிஜமாவே அந்த இடத்துல ஒரு பாதுகாப்பும் இல்லாம இத்தனைப் பேரு எப்படி வசிக்கறாங்க, ரொம்ப கஷ்டமில்லையா? ?"
"தெரியலையே ரஞ்சி, சரி விடு, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் அந்த புளுகு மூட்டையின் வண்டவாளம்" என்று சிரித்துக்கொண்டே, வேகத்தைக் குறைத்து, அந்த ஊருக்குச் செல்லும்  ஒற்றை வழிச்சாலையில் காரினைத் திருப்பினான்.
இன்று ரோந்து பார்க்க யார் யாரெல்லாம் செல்ல வேண்டும் என்பதுப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் சசியும் நண்பர்களும். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சிறிது நேரத்தில், அந்த அழகான வெள்ளை நிற பென்ஸ் கார் கேட்டினுள் நுழைந்து, அவர்கள் அருகே வந்து நின்றது. சசியைப் பார்த்ததும், கார்த்தியும் ரஞ்சனாவும் காரிலிருந்து இறங்கி வர, சசி, வேகமாக நடந்து வந்து கார்த்தியைக் கட்டிக்கொண்டான். "நீ வர வரைக்கும் உயிரே இல்லடா" என்றுவிட்டு, இருவரையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக திரும்பி நண்பர்களைப் பார்த்தான். அனால், அவர்களின் பார்வையோ அந்த புதுக் காரின் மேல் அழுத்தமாக இருந்தது. அதை கவனித்துவிட்டு, கொஞ்சம் பெருமையோடு சிரித்தான் கார்த்தி.
சசியின் நண்பன் சந்துரு சசியைப் பார்த்து "டேய் சசி என்னடா இது, இருக்குற பிரசைனையில இது வேற. நீ எதையும் அவங்ககிட்ட சொல்லவே இல்லையா? புதுக்கார், அதுவும் விலை உயர்ந்த பென்ஸ் கார்ல வந்திருக்காங்க. கொள்ளக்காரங்க கண்ணுல பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?" என்று கேட்க, அப்போதுதான் கார்த்திக்கும் ரஞ்சனாவுக்கும் திக்கென்றது. எல்லோர் முகத்திலும் இனம் புரியாத பயம் படர்ந்தது. முதலில் இந்த காரை எப்படியாவது கொள்ளையர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று, எல்லோரும் சேர்ந்து இடம் தேட ஆயத்தமாக... இங்கே நடப்பவற்றையெல்லம் மதில் சுவற்றின்அந்தப் பக்கம் இருந்து ஜீப்பில் நின்றபடி, ஆயுதம் ஏந்தியக் கொள்ளையர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கார் ஊருக்குள் நுழையும்போதே பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இது தெரியாத நம்ம ஆட்கள், கொள்ளையர்களிடம் வசமாக மாட்டும் விதமாக, வெட்டவெளியில் காரை நிறுத்தி பேசிகொண்டிருந்திருக்கிறார்கள். இப்போது வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
ஒரு கொள்ளையன் துப்பாக்கியைக் குறிப்பார்க்க, அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒளிந்து கொள்ள இடம் தேடி, ஒவ்வொரு பக்கமாக ஓடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டின் முதல் சத்தம் கேட்டது, கூடவே ஒருவனின் "ஆ.." என்ற அலறல். பிறகு வரிசையாக துப்பாக்கிச் சூட்டின் டுமில் சத்தங்களும் "ஆ..., ஓ..." என்ற அலறல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரத்தில் சயரன் சத்தங்களும் போலீஸ் வாகனங்களும் வர ஏதேதோ கலவையான சத்தங்கள் கேட்கின்றன. காரின் பின்னால் ஒளிந்திருக்கிறான் சசி, ஒவ்வொரு நொடியும் எந்தப் பக்கமிருந்தும் குண்டு பாயலாம் என்ற அபாயகர எண்ணமும், மஹா, சஞ்சனாவின் நினைவும் மாறி மாறி அழுத்த... திடீர்யென்று, எதோ ஒருப் பக்கமிருந்து "என்னங்க..." என்று மஹாவின் அலறல் கேட்க, அலறல் வந்த திசையை திரும்பிப் பார்பதற்குள், அவனை நோக்கி சீறியது ஒரு துப்பாக்கிக் குண்டின் பாய்ச்சல்... அந்த நொடி... அசைவற்ற அந்த ஒரே ஒரு வினாடி... டுமில் என்ற சத்தம் அவன் காதருகில் தெளிவாகக் கேட்க, நெற்றிப் பொட்டில் ஏதோப் பட்டுத் தெரித்தது...   டபக்குன்னு எழுந்து உட்கார்ந்தான் சசி. நெற்றியின் மேல் சுர்ரென்று விழுந்த வேப்பம்பழக் கொட்டை கீழே உருண்டு விழுந்தது. உள்ளே அடைத்தது போல நின்றிருந்த மூச்சுக் காற்றை புஸ்ஸேன்று வெளியே விட்டான். எங்கே மஹா எங்கே எல்லோரும் என்று தேடினான். சுற்றிலும் வெப்ப மர சருகுகள் உதிர்ந்துக் கிடக்க, தன் வீட்டு வேப்பமரத்தடியில் கட்டில் மேல் அமர்ந்திருப்பது புரிந்தது. தொட்டிலில் குழந்தை ம்ம்... எனச் சிணுங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. தொட்டிலை நனைத்துவிட்டாள் போல. லேசாக சிரித்துக் கொண்டான்.
புஸ்ஸு புஸ்ஸுவென்று, தலையில பெரிய புல்லு சுமை வைத்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, ரப்பர் செருப்பின் டபக் டபக் சத்தத்துடன் நடந்து வந்து மாட்டுக் கட்டுத்தரையில் பில்லு சுமையை இறக்கி போட்டுவிட்டு, "ஏங்க இவ்வளோ நேரமா தூங்குனிங்க? மணி நாலு ஆகிடுச்சி... மாடு கண்ணெல்லாம் கத்திகிட்டு கெடக்கு, எல்லாத்தையும் மாத்திக் கட்டி, சாணி வாரணும், தீவணத்தட்டு அருக்கணும், எத்தன வேல கெடக்குது?" என்றுக் கேட்டவாறே, தலைச் சீமாட்டை அவிழ்த்து உதறிவிட்டு, சேலைத் தலைப்பினில் வேர்த்து வழிந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிநீர்த் தொட்டியின், கேட்வால்வு பைப்பினை திறந்துவிட்டு, உள்ளங்கையினை குவித்து, தண்ணீர் குடித்தாள்.
சசி இன்னுமும் அப்படியே உட்கார்ந்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் "என்னங்க..." என்ற அலறியக் குரல் இப்போதும் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
லேசாக வெட்கப்பட்டு  "என்னங்க என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க... எந்திரிச்சி போய் வேலையைப் பாருங்க... சாயுங்காலம் ஆகிடுச்சி பார்த்திங்கல்ல... தெனமும் ராத்திரியில நடுநிசி வரைக்கும் டிவி ஓடிகிட்டே இருக்குது. தமிழ் படம் இங்கிலீஷ் படம்ன்னு ஒண்ணுத்தையும் விடுறதில்ல, பெரிய சீமைத்துறைன்னு நினைப்பு. ம்ம்க்கும்..." என்று முகவாயை தோளில் இடித்துச் சிலுப்பிக் கொண்டு குழந்தை முளித்துவிட்டதா என்று பார்க்கப் போனாள்.
அவளுடைய அலம்பலில் சசி இப்போது வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பதையே கொஞ்சம் நேரம் ஓரக் கண்ணில் பார்த்தவள், வேலைகளை உணர்ந்து வேகவேகமாக நடந்தவள் , திடீரென்று திரும்பி "எங்க கார்த்தி அண்ணனும் அண்ணியும், ஆறு மணி பஸ்சுல வந்துகிட்டுருக்காங்களாம், இந்த மாட்டு வேலையை முடிச்சிட்டு போய்க் கூட்டிகிட்டு வந்துடுங்க..." என்றுவிட்டு அடைத்து வைத்த ஆட்டுக்குட்டிகளையும், கோழிக் குஞ்சிகளையும் திறந்துவிட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போனாள்.
சசி இன்னமும் அந்த ஹாலிவுட் கனவுக்குள் தன் நிஜ வாழ்க்கையோடு கலந்தவர்களைத் தேடிக்கொண்டிருந்தான். 

Tuesday, December 16, 2014

நாங்கல்லாம் கார் ஓட்டினா... episode - 2

சீட்ல ஏறி உட்கார்ந்தேன். எப்படியும் அந்த ஆன்ட்டி, அவங்கள இன்ட்ரோ பண்ணிக்கிட்டு கொஞ்சம் நேரம் எதாவது பேசுவாங்கன்னு பார்த்தா, எடுத்த எடுப்பிலேயே, சீட் கம்போர்ட்டா இருக்கான்னு கேட்டுட்டு, "can u find the break and gas?" ன்னு கிளாஸ ஆரம்பிச்சுட்டாங்க. பேசிகிட்டே கொஞ்சம் ஜாலியா ஒப்பி அடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். கொஞ்ச நேரம் எதுவும் புரியாம, அப்புறம் குனிந்து பார்த்து, "yes yes"ன்னு தலைய நல்லா ஆட்டிட்டு, ரெண்டு காலையும் தூக்கி, "பிரேக்"ல ஒரு காலையும்,  "accelerator (gas)"ல ஒரு காலையும் (அதுல எது பிரேக், எது காஸ்ன்னு வேற அப்போ தெரியல) வைத்துக் கொண்டு, "ya its perfect"ன்னேன்,  சின்ன ஸ்மைலோட (smile :-) ), ரொம்ப கரெக்டா பண்ணிட்ட மாதிரி. அவங்க எட்டி பார்த்து ஷாக் ஆகி, "No no, u should use only the right leg for both"ன்னாங்க. பாவம், அவங்களால வேற என்ன சொல்ல முடியும், இப்பதான் புரிஞ்சிருக்கும் எனக்கு கார் பத்தி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும்ன்னு. அப்புறம் indicator எப்படி போடணும், gear எப்படி மாத்தனும்ன்னு ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு சொல்லிக் கொடுத்தாங்க. பெறவு, டப்புன்னு "press the break and start the car"ன்னுடாங்க.ஸ்டார்ட் த காரா? கீழையும் மேலையும் குனிஞ்சி நிமிர்ந்து தேடி பார்க்கறேன், கார எதுலங்க ஸ்டார்ட் பண்றது, அத சொன்னாதான தெரியும் :-(. கொஞ்ச நேரம் நான் தடுமாறரத பார்த்துட்டு அவங்களே சாவிய திருப்பி கார ஸ்டார்ட் பண்ணிடாங்க. அப்பா, ஒரு வழியா, சாவி போடுற இடத்த, என் CBI மூளையை use பண்ணி கண்டுபிடிச்சிட்டேன். :-)
இப்போ லேசா பிரேக்ல இருந்து கால எடுன்னாங்க. கார் லைட்டா move ஆக ஆரம்பிச்சது. ஹை, அதுக்குள்ள சூப்பரா கார் ஓட்ட  ஆரம்பிச்சிடோமேன்னு சந்தோசத்துல், ஸ்டீரிங்க பிடிக்க மறந்துட்டேன். எப்டியும் ஒரு கையில அந்த ஆன்ட்டி ஸ்டேரிங்க பிடிசிருந்தாங்க, அதனால பிரச்சனை இல்லை. ஸ்ஸப்பா இப்போவே நமக்கு கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சே... இந்த கார் ஓட்டுறதுல இவ்ளோ கஷ்டம் இருக்கும்ன்னு முன்னையே தெரியாம போய்டுச்சுங்க. பிரேக்க கவனிச்சா, ரோட்ட கவனிக்க முடியல. ரோட்ட கவனிச்சா, எது பிரேக், எது ஆச்செலரேட்டர்ன்னு மறந்து போயிடுது. முடியலடா சாமி, எப்படா என்ன திரும்ப வீட்டுக்கு விடுவாங்கன்னு, பள்ளிகூடத்து புள்ள மாதிரி பீல் பண்ண வெச்சிடாங்க, கார எடுத்த ஐஞ்சு நிமிஷத்துலயே...!!! ;-(
எப்படியோ ஒரு அரைமணி நேரத்துக்கு அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா, இந்த indicator எங்க எங்க போடணும்; பிரேக், காஸ், ரெண்டுக்குமான வித்யாசம்; சிக்னல்ல எப்படி நிறுத்தறதுன்னு மெதுவா புரிய ஆரம்பிச்சது. ஆனாலும், முக்கியமான அந்த "ஸ்டேரிங் கண்ட்ரோல்" மட்டும் இப்போ வரைக்கும் புடிபட  மாட்டேன்குது. அன்னைக்கு ஒரு ரெண்டு மணி நேரம் இப்படியே ஓட்ட விட்டாங்க! U-turns போட கத்துக் கொடுத்தாங்க, ஆனாலும், இன்னும் நாம எதையுமே ஒழுங்கா கத்துக்கல. எல்லாத்தையும் ஒரே நாள்ல கத்துகிட்டா, பாவம், இந்த driving school வெச்சு நடத்துறவங்க எல்லாரும், எப்படி பொழைக்கறதுன்ற நல்ல என்னத்துல, பொறுமையா கத்துக்கலாம்ன்னு விட்டுட்டேன்.
ரொம்ப லென்த்தா போகுதா? சரி சரி... இத்தோடு முடிச்சிக்கறேன்... நானும் போய் "ஒரே நாளில் கார் கற்றுக்கொள்வது எப்படி"ன்ற புத்தகத்த படிச்சு, ஒரே பாட்டுல ரஜினி பணக்காரர் ஆகுற மாதிரி, இந்த blogger சரண்யா, ஒரே நாள்ல கார் கத்துக்கிட்டு... கத்துக்கிட்டு... வேற என்னங்க பண்ணப் போறோம், நானும் என் பையனும் ஜாலியா ஊற சுத்துவோம் (ரிஸ்க் எடுக்குறதெல்லாம் சஞ்சு குட்டிக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!!!).  இதுக்குமேல என்ன சொல்ல... அடுத்த க்ளாஸ் போயிட்டு வந்து, நடக்கப் போற ரணகளத்த,  குதுகலமா சொல்றேன்.... Bye... :-)
பின்குறிப்பு: என்னடா, எபிசொட் கணக்கெல்லாம் போட்டு எழுதி இருக்கே இந்த பொண்ணு, ஒரு வேலை, வாரக் கணக்குல, மாசக் கணக்குல போகுமோன்னு மலைச்சு போய்ட்டிங்களா? உங்களுக்கு கதை சொல்லி, கதை எழுதி ஒரு "பெரிய" கதாசிரியர் (Novelist!!? ) ஆகனும்ன்னு "பிளான்" எல்லாம் போட்டு வெச்சிருக்கேன் :-). so... ப்ளீஸ்... படிச்சிட்டு உங்க feedbacks சொல்லுங்க... தேங்க்ஸ்!

Monday, December 15, 2014

நாங்கல்லாம் கார் ஓட்டினா...

இந்த ஊருல கிட்டத்தட்ட மூணு வாரமா மழையா பெய்யுதுங்க. என் பையன் பாவம் வெளியே விளையாட கூட போக முடியாம, எப்போ பார்த்தாலும் "TAB"ம் கையுமாவே இருக்கான். எத்தன தடவைதான் அந்தக் கண்ணாடி கதவைத் தட்டித் தட்டி "rain rain go away"ன்னு பாடிட்டிருப்பான். அவனுக்கும் போர் அடிக்கும்ல. மழையே இல்லாம காய்ந்துப் போய் கிடக்குற நம்ம சொந்த ஊரு பக்கம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன, முடிந்தால் நிறையவே), இந்த மழையை பார்சல் பண்ணி அனுப்ப முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். ஒரு நாள், ரெண்டு நாளுன்னா, மழை பெய்யரதப் பார்க்கறதே, ரொம்ப ரசனையா தான் இருக்கு, அதுவே மாசக் கணக்குலன்னா, தாங்காதுடா சாமி... அதுவும் நான் கார் ஓட்டிக் கத்துகிட்டு, licence வாங்க ஆவலா (?!) இருக்கற இந்த சமயத்துல, இப்படி விடாம பெய்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்.
 ஏம்மா இப்படி ஏதேதோ வெட்டி பேச்சு பேசிட்டிருக்கன்னு மட்டும் கேட்டுறாதிங்க ப்ளீஸ், வெட்டியா இருக்கறதும், வெட்டியா பேசறதும், topic எதும் இல்லாம இப்படி வெட்டியா எதாச்சும் எழுதறதும் எவ்வளோ கஷ்டம்ன்னு, வெட்டியா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்.! (யாருக்காச்சும் புரிஞ்சுதா பாஸ்? ).
சரி, கோபப்படாதிங்க. இப்போ சீரியஸா எதாச்சும் பேசலாமா? ம்ம்ம்... இருங்க இருங்க மூளையை கசக்கி யோசிக்கறோம்ல!!! ஓகே போன வாரம் "உலக வரலாற்றில் முதன் முதலாக" நான் கார் ஓட்டக் கத்துக்கறதுக்கு க்ளாஸ் போயிருந்தேன்ங்க (அட நிஜமாதான்). அந்த வரலாற்று நிகழ்ச்சியத்தான் கொஞ்சம் கிண்டிக் கிளறப் போறேன் இப்போ. (என்னடா இதையெல்லாம் வரலாறுங்கிறேனேன்னு பார்க்கிறீங்களா, நாங்கல்லாம் ஸ்டீரிங்க பிடிக்கறதே ஒரு வரலாறுதானங்க.). இது ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம், so... கொஞ்சம் சீரியஸா படிக்கறீங்க...!! :-)
இந்த ஊருல கார் driving licence வாங்கணும்னா முதல்ல ஒரு driving written test எழுதி பாஸ் பண்ணனும். அதுக்கு  apply பண்றதுக்கு என்னன்னமோ process இருக்குங்க, அதையெல்லாம் எங்க வீட்டுக்காரர் பார்த்துக்கிட்டார் (இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் நம்ம மூளையை கசக்ககூடாது). நம்ம காரியதுல்ல மட்டும் கண்ணா இருக்கணும்னு முடிவு பண்ணி, கஷ்டப் பட்டு, சோறு தண்ணி இல்லாம (விரதம் இருந்து - நான் இல்லைங்க, என் வீட்டுக்காரர் !! ;-)), ராத்திரி பகல் பாராம, படிச்சி, ஒரு வழியா கலெக்டர் எக்ஸாம பாஸ் பண்ணியாச்சு (அதுவும் first attempt லயே - note this point your honor).
Written test பாஸ் பண்ண உடனே, என்னமோ licenceயே கையில வாங்கிட்ட மாதிரி நினைப்பு, ஹோ... writtenயே பாஸ் பண்ணிட்டோம், கார ஓட்டறது என்ன பெரிய விஷயமான்னு கொஞ்சம் தெனாவெட்டாதாங்க திரிஞ்சிடிருந்தேன். இதுல அப்பப்போ "ஏங்க இப்படி ஓட்டறிங்க, அப்படி திருப்பக் கூடாதுன்னு, ஸ்பீட் லிமிட்க்கு மேல போறீங்க"ன்னு வீட்டுக்காரருக்கு கொஞ்சம் ப்ரீ அட்வைஸ அள்ளி விட, பாதிப்படைந்த மனுஷன் (பொறாமையில) "நீ சரிப்பட்டு வரமாட்டன்னு" சொல்லி ஒரு driving schoolக்கு போனப் போட்டு கிளாஸ்க்கு புக் பண்ணிட்டார் (;-( ).
போன வாரம் சனிக்கிழமை முதல் கிளாஸ். ஒரு ஆண்ட்டி (கொஞ்சம் பாட்டி தான், இருந்தாலும் பியூட்டியா இருந்தனால ஆண்ட்டின்னே சொல்லிக்கறேன் - எங்களுக்கும் rhymingஆ பேச வருமுல்ல!!!) தான் கத்துக் கொடுக்க வந்திருந்தாங்க. சரி எப்படியும், ஒரு கிளாஸ் (one class - 2 hours) எப்படியும், எப்படி ஸ்டீரிங் பிடிக்கறது, எப்படி சீட் அட்ஜஸ்ட் பண்றதுன்னு, தியரியா தான் எனக்கு சொல்லிக் கொடுக்கப் போறாங்க, அதனால இன்னைக்கு எப்டியும் ஓட்டுறதுல இருந்து தப்பிச்சிடலாம்ன்னு நினைச்சேன்.
காலைல 10.30க்கு அப்பாயின்மெண்ட். 10.25கெல்லாம் ஷார்ப்பா வந்து, அபர்ட்மெண்ட் கேட் பக்கத்துல அவங்க வண்டிய நிறுத்திட்டு கால் பண்ணாங்க. நாங்க கிளம்பிப் போனதும், "Learner's permit"அ வாங்கி வச்சிக்கிட்டு, என்னைப் பார்த்து "come and sit"ன்னு டிரைவர் சீட்டைக் காட்டினாங்க. எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சி. அவ்ளோ நாள் சும்மா ஜாலியா உதார் விட்டுகிட்டிருந்த என்னை எடுத்த எடுப்பில் டிரைவர் சீட்ல உட்கார சொன்னா, என்ன செய்யறது நான். கொஞ்சம் நேரம் பதறிப் போய், என் புருஷனையும், காரையும், அந்த ஆண்ட்டியையும் மாறி மாறிப் பார்த்துட்டு, வேற வழி இல்லாம ஏறி உட்கார்ந்தேன். சத்தியமா சொல்றேங்க பண்ணிரண்டாவது முழுப் பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம போய் உட்கார்ந்தா, வயித்துக்குள்ள ஏதோ ஒன்னு பிசையுமுள்ள, அப்படி ஒரு bad feeling :-(, இத்தனை வருஷத்துல, இதுக்கு முன்னாடி, விளையாட்டா கூட, எந்த கார்லயும் டிரைவர் சீட்ல உட்கார்ந்தது இல்ல (தெரியாத்தனமா எதுலயாவது கையோ, காலோ பட்டு, கார் நகர்ந்து போய் எதுலயாவது மோதிடுச்சின்னா).
(இதுக்கு மேலக் கதைய நாளைக்கு continue பண்றேங்க)...

Monday, November 10, 2014

ஞாயிற்று கிழமை வந்தாலே...

அப்போதெல்லாம் ஞாயிற்று கிழமை வந்தாலே செம குஷியா இருக்கும். பள்ளிக்கூடம் லீவுன்றது ஒரு பக்கம் இருந்தாலும் பொண்டு பொடுசுங்க எல்லாம் சேர்ந்து குதித்தாளம் போடலாமே, அதுதான் முக்கியமானது. ஒன்னு நாம பக்கத்து வீட்ல இருப்போம், அல்லது அவங்க நம்ம வீட்ல இருப்பாங்க. இல்லன்னா நானும் வேலை செய்யறேன்னு எதாவது எடுபுடி வேலை செஞ்சிட்டிருப்போம் (அது கூட ஒரு செம entertainment-தாங்க).
அப்போல்லாம் வாசல்ல மண் அடுப்பு கூட்டி தான் சோறு பொங்குவாங்க. பொதுவா நாங்க வளர்க்கற கோழிச் சேவலுங்கள்ள ஒன்ன புடிச்சி, அடிச்சி, தென்னஞ்சோவையை பற்ற வெச்சு, அடிச்ச சேவல வாட்டுவாங்க. சேவலோட பொங்கு முடி பொசுங்கும்போது வரும் கருகு வாடை காற்றோடு கலந்து மூக்கில் ஏறும். வாட்டின பொறவு மஞ்சத் தூள் போட்டு நல்லா கழுவி எடுப்பாங்க. அது வரைக்கும் எங்க தாத்தா பின்னாலேயே நின்னுகிட்டு, குளிருக்கு கைய கட்டியிருப்பாங்களே, அது மாதிரி குறுக்கால கட்டிக்கிட்டு, குறு குறுன்னு கோழியையே கண்ணெடுக்காம பார்த்துட்டிருப்பேன். "கண்ணு, போயி மஞ்சப்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வா"ன்னு சொன்னா போதும், குடு குடுன்னு ஓடி போய், கீழ பாதி மேல பாதின்னு கொட்டிகிட்டு கொண்டு வருவேன் (அதுக்கு ஒரு திட்டு விழுந்தாலும், அதையெல்லாம் யாரு காதுல வாங்குனது..!? :-)). அவ்வளவு அவசரம், நாம வர்றதுக்குள்ள எதாவது பண்ணிடுவாங்களோன்னு (class-அ மிஸ் பண்ணிட கூடாதுல்ல). அப்புறம் என்னை சேவலோட கழுத்த தூக்கி பிடிக்க சொல்லுவாங்க. பெருசு பெருசா ரெண்டு வாழை இலை அறுத்து வந்து, ஒன்னோடு ஒன்னு சேர்த்தது போல போட்டு, அது மேல கறி நறுக்குற கட்டைய வெச்சு, அந்த கட்ட மேல சேவல வெச்சு, அதுக்குன்னே இருக்கற பெரிய கொடுவாள்ல நறுக் நறுக்குன்னு வெட்டித் தனித் தனியா குவிச்சு வைப்பாங்க. 
இதோட நம்ம வேலை முடிஞ்சுது. அதுக்கப்புறம் இந்த சமையல் section பக்கமெல்லாம் நாம எட்டி கூட பார்க்கமாட்டோம் (அது வேற department ! ;-)). எங்க, அத எடுத்துட்டு வா, இத நுணுக்கிட்டு வான்னு, கூப்பிட்டுருவாங்கலோன்னு பம்பிகிட்டே நிப்பேன். அப்போன்னுதான், கரெக்டா எங்க அண்ணன கூப்பிட்டு, "டேய், போயி சின்னத் தென்ன மரத்துல ஒரு எளந்தேங்கா பறிச்சிட்டு வா"ன்னு சொல்வாங்க. இந்த சான்ஸ நாம விடுவமா, அவன் சரின்னு தலைய ஆட்டுறதுக்குள்ள  நான் கீழ் தென்ன மட்டைய பிடிச்சிட்டு தொங்கிட்டிருப்பேன், மரம் ஏர்றதுக்கு. 
எங்க அம்மா ஒரு காயின்னு சொன்னா, நான் எப்படியும் ரெண்டு மூணு காயாவது பிடுங்கி போட்டு, தூக்க முடியாம தூக்கிட்டு போவேன். "எதுக்கு புள்ள இத்தன தேங்கா"ன்னு ஷாக்-ல வாயடைச்சு நிப்பாங்க. அப்புறம் எப்படியும் ஒரு ரெண்டு காய உரிச்சு, ஒடச்சு, தண்ணிய புல்லா குடிச்சிட்டு, அம்மா இந்தா தேங்கான்னு கொடுப்பேன். அதுக்குள்ள, அங்க பெரிய குண்டாவுல குழம்பு ரெடியா கொதிச்சிட்டிருக்கும். குழம்பு குடிக்கறவங்க வாங்கன்னு எங்கம்மா கூப்பிடுறதுக்குள்ள, நாங்கல்லாம் பெர்பெக்டா, அடுப்ப சுத்தி ஆஜர் ஆகிடுவோம். 
உடைச்ச தேங்காவுல இருக்கற பருப்ப நோண்டி தனியா எடுத்துட்டு, ஆளுக்கொரு தொட்டிய (தேங்காய் ஓட்டினை தென்னந்தோட்டின்னு பேச்சுவழக்குல சொல்வோம்) கையில கொடுத்து, அதுல குழம்பு ஊற்றுவாங்க. (அது ரசத்தின் தடிப்பில் இருக்கும், குழம்பிற்கு தேங்காய் அரைத்து விடும் முன்பு, மசாலா பொருட்களில் வெந்த நீர், கொஞ்சம் காரமாக, சூப்பராக இருக்கும்). யாருக்கு அதிகமா இருக்குன்னு அதுக்கொரு சண்டை வரும் அப்போ. எப்படியும் எனக்கு தான் அதிகமா இருக்கும், இருந்தாலும், ஒவ்வொருத்தரோட தொட்டியையும் செக் பண்ணி பார்த்துட்டு தான், நாங்க குடிப்போமுல்ல!. எப்படியும் ஒரு ரெண்டு வாய் குடிச்சிட்டு, சுடுது, கார்க்குதுன்னு, எங்க அம்மகிட்டயோ, சித்திகிட்டயோ கொடுத்துட்டு ஓடிடுவேன். அதுக்கு இவ்வளவு பில்டப்பு...!!!
அதுக்கப்புறம் எப்படியும் சாப்பாடு ரெடி ஆக மதியான நேரம் ஆகிடும்.
நல்லா சாப்பிட்டுட்டு, எல்லாரும் வெப்ப மரத்தடியில் கயித்துக் கட்டில போட்டு, உட்கார்ந்து கதை பேசிட்டிருப்பாங்க. நான் நல்ல கதை கேட்டுகிட்டே என்னோட ஆட்டுக்குட்டிக்கு பேன் பார்த்துட்டிருப்பேன் (!! :-) ). அப்புறம் சாயங்காலம் இருட்டுற வரைக்கும் பிஸியா "வேலை?" பார்த்துட்டு, அடுத்த நாள் பள்ளிகூடம் போகணும்கிற நெனப்புல, எப்போடா அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரும்ன்னு நினைச்சிட்டே homework பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுவேன் (நம்புங்க மக்களா, நாங்களும் படிச்சோமுள்ள !!! ).

Wednesday, September 17, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 3

இன்னைக்கு இங்கே செம மழை... நினெச்சே பார்க்கல இந்த ஊருல இப்படி ஒரு மழைய பார்ப்போம்ன்னு. இந்த ரெண்டு நாளா அடிச்ச வெயிலுக்கு இன்னைக்கு மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுச்சி. கை விரல் முழுகுற அளவுக்கு வெளியில தண்ணி தேங்கி இருக்குன்னா பார்த்துகோங்களேன். இந்த மாதிரி மழைய பார்த்து பல வருஷங்கள் ஆச்சு.
என் பையன் ஓடி ஓடி வாசப்படிகிட்ட நின்னு தேங்கி ஓடுற மழைத் தண்ணிய பாக்கறதும், லேசான சாரல் பட்டு சிலிர்கறதும், திருட்டுத் தனமா இறங்கி விளையாட முயற்சிக்கறதும், இடி இடிச்சா ஓடி வந்து கட்டி பிடிச்சிக்கறதும், திரும்பவும் ஓடிப் போய் "rain rain go away..." ன்னு பாடறதும்... ப்பா...! ஏதோ செம ஜாலி படம் பார்த்த மாதிரி இருக்கு. இங்க வந்து இந்த ஒன்றறை வருஷத்துல இந்த மாதிரி சல சலன்னு கொட்டுற மழைய பார்க்கவே இல்லை (feeling !!!). எப்போவாவது லேசா தலை காட்டிட்டு (அதும் correctஆ weekend morning-ஆ பார்த்து) போற மழை இன்னைக்குதான் நல்லா தலையை ஆட்டியிருக்கு. ஆமாங்க, அடிச்ச காத்துல பாதி மரங்கள்ல இலை தலையையே காணோம். பாதி மரங்கள் ரோட்ல தான் கிடக்குது.
தேங்கின மழைத் தண்ணிய பார்த்ததும் பெரிய இவ மாதிரி வாடா கப்பல் விடலாம்ன்னு, news paper ல கப்பல் செய்ய try பண்ணி, எப்படி செய்யறதுன்னு மறந்து போய் ஒழுங்கா வராம, பேப்பர கசக்கி உருட்டி, இந்தாடா கப்பல்ன்னு கொடுத்தேன் ( !! ). நான் அந்த கப்பல ( !? ) செய்து முடிக்கற வரைக்கும், கப்பல் கப்பல்ன்னு கத்திக்கிட்திருந்தவன், அத கையில வாங்கியதும் "இது boll" ன்னு (ball அ  எப்போவும் ஐயா boll ன்னு தான் சொல்லுவாரு - அமெரிக்கன் இங்கிலிபிஷ்) என் மேலேயே எறிஞ்சிட்டு போய்ட்டான் (அச்சச்சோ பையன் வளர்ந்துட்டான் !!! ). இனிமேட்டு நோ ஏமாத்துபயிங்.... :-(
இந்த ஊரே (San Diego) பள்ளத்தாக்குகளில் தான் அமைந்துள்ளது. அதுவும் நிறைய இடத்தில் மலை உச்சி முகடுகளை சமன் படுத்தி apartments அல்லது தனி வீடுகள் கட்டியிருப்பார்கள். சின்னச் சின்ன மலைகளும் அதன் சரிவுகளும், ஆங்காங்கே இருக்கும் தொடர் வீடுகளும் (எல்லா வீடுகளுக்குமே பொதுவாக ஒரே மாதிரி கண்ணை உறுத்தாத வெளிர் நிறம்தான் கொடுத்திருப்பார்கள்),  புதிதாக பார்பவர்களுக்கு கொள்ளை அழகு. ஆனால் அவ்வளவு அழகையும் கோடை வெயிலால் காய்ந்த செடிகளும், புதர்களும், சருகுகளும் மறைத்து ஏதோ வனாந்திரம் போலத்தான் இருந்தது. இந்த மழைக்கு இனி ஊரே பார்க்க செளுசெளுப்பா இருக்கப் போகுது, மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் பசுமையாப் பார்த்தாதானே சூப்பரா இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் மழைத்துளி பட்ட மலைகளில் எல்லாம் பச்சை கோர்த்து எங்கும் சில் சில்லுன்னு இருக்கப் போகுது. மழையே அழகுதான், அதுவும் மழை பொழிந்த பிறகு பசுமை படர்ந்த இயற்கை மிக மிக அழகு... அப்புறம் ஒவ்வொரு weekend -ம் பச்சை பசேல்ன்னு தெரியற இடங்கள கிளிக் பண்ண ஜாலியா கிளம்பிடுவோம். :-)
மழை விட்டதும் "அம்மா தண்ணி போச் தண்ணி போச்..." ன்னு மேலே வானத்தை கை காட்டினான் சஞ்சு குட்டி. இனிமே "rain rain where did you go/ sanjay wants to play with you/ come again very soon/ to give us the happy boon"ன்னு பாட கத்துக் கொடுக்கணும்...!

Sunday, August 24, 2014

வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு....

பொதுவாக இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் பெரும்பாலும் படித்து முடித்ததும் பெரு நகரத்தில் நல்ல வேலை கிடைத்து, ஹாஸ்டல் அல்லது நான்கைந்து பேர் சேர்ந்து வீடு எடுத்துத் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் வேலை நேரம் போக மீதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் சில ஐடியாக்கள்...
  • காலை சென்று மாலை (9 to 6 day time job without shift) திரும்பும் பெண்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நல்ல tailoring workshop இருந்தால், அங்கே உங்களுக்கு விருப்பம் உள்ள embroidery, stitching, அல்லது ஜம்கி வேலைகள், குரோசே வேலைகள் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தால் பக்கத்தில் இருக்கும் பப்ளிக் லைப்ரரியில், membership card வாங்கி பிடித்த புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். 
  • எளிமையான அதே சமயம் உபயோகமான (உங்கள் வேலை சம்பந்தமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை) கம்ப்யூட்டர் கோர்ஸ், Photoshop, graphics, போல எதாவது கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு விசேஷத்தில், அல்லது tour போகும்போது எடுக்கும் போட்டோக்களை, நீங்களே அழகாக வடிவமைத்து, உங்கள் வீட்டினரை அசத்தலாம் (முக்கியமாக திருமணத்திற்குப் பின்). அவர்களுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் கூடுதால் சந்தோஷம்.
  • எதாவது சமையல் வகுப்புகள் (cooking class) சென்று புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளலாம். இது இன்றையப் பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது. திருமணம் ஆன பின் மிகவும் தேவைப்படக் கூடிய, பயன்படக் கூடிய ஒன்று. 
  • அழகு நிலையம் சென்று உங்களை நீங்களே எப்படி சரியாக இடத்திற்கேற்ப, அழகுப் படுத்திக் கொள்வது (presentable) என்று கற்றுக் கொள்ளலாம். நீங்கள் தினமுமோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ, அரைமணி, ஒருமணி நேரம் என உங்கள் விருப்பம் போல கற்றுக் கொள்ளலாம்.
  • Drawing, Painting, Sewing, Crafting, Mehandi, Decorations, Dance, Music, என உங்களுக்கு எதில் ஆர்வமோ அதைக் கற்றுக் கொள்ளலாம். 
தினமும் அல்லது வார இறுதியில் ஒரு மணி நேரம் சென்று கற்றுக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே உங்களுக்கு என்று கிடைத்திருக்கும் பொன்னான நேரம் இது மட்டும்தான். படிக்கும் காலத்தில், படிப்பதற்கே நேரம் முழுவதும் போய்விடும், திருமணத்திற்கு பின், இது போலவெல்லாம் கற்றுக் கொள்ள நேரமும், சூழ்நிலையும் அமையாமல் போகலாம். அதனால், உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள, வடிவமைத்துக் கொள்ள, உங்கள் திறமைகளை வெளிக்கொணர, இதுதான் சரியான . காலம்.
புதிது புதிதாக கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்கு எப்போதுமே போர் அடிக்காது. அதனால் உங்கள் மனம் வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபடாது. உங்கள் வேலைப் பளுவின் "tension, stress" குறைய மிகச் சிறந்த வழி இது. எடுத்துக்காட்டாக, நீங்களே உங்கள் கையால் நீங்கள் கற்றுக் கொண்ட கலை மூலம் ஒரு "sweater" தைத்து உங்கள் அண்ணன் மகளுக்கோ, அக்கா குழந்தைக்கோ கொடுத்தீர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள், அவர்கள் எவ்வளோ மகிழ்ச்சி அடைவார்கள். என் தங்கை வேலைக்கு போய்கிட்டே, கிடைக்கற நேரத்தில் இதை பின்னிக் கொடுத்தாள்ன்னு வாழ்க்கை முழுவதும் பத்திரமாக, உங்கள் நியாபகார்த்தமாக வைத்திருப்பார்கள். உங்களுக்கும் உங்கள் நேரத்தை உபயோகமாக பயன்படுத்திய, அதே சமயம் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கும்.
தோழிகளோடு பேசி, சிரித்து, டிவி பார்த்து, மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே சமயம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் திட்டமிட்டு கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முழுதும் அந்தக் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் உங்கள் கூடவே வரும். 
Related Posts Plugin for WordPress, Blogger...