Friday, August 22, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 2

மழைக் காளானும் குமுட்டியும்

நல்ல மழை பெய்தால் வரப்பு ஓரங்களில் மொட்டு மொட்டாக காளான்கள் முளைக்கும். மழைப் பெய்த அடுத்த இரண்டு மூன்று நாட்களில், ஈரம் காய்வதற்கு முன்னே, கொஞ்சம் மேடான வரப்போரங்களில், ஓடைக் கரையில், வாய்க்கால் பகுதிகளில், ஒன்று இரண்டு காளான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, முட்டிக் கொண்டு வரும். அது முளைத்த அன்றே பறித்தால் தான் உண்டு, இல்லையென்றால், விரிந்து,  புழு வந்து அழுகிவிடும். அதனால், மழை பெய்த அடுத்தடுத்த  நாட்களில், காலையில் எழுந்ததும் முதல் வேலையே இந்த காளான் வேட்டை தான். வரப்பு, வாய்கால்ன்னு சுத்தி அலைஞ்சு, எங்காவது காளான் முளைச்சிருக்கான்னு பார்ப்பேன். நான்தான் அப்படின்னு நினைச்சுடாதிங்க, எங்க வீட்ல எல்லாருமே அப்பப்போ தேடி பிடிச்சு, காளான்கள் கொண்டு வருவாங்க.  நிறைய காளான்கள் கிடைத்தால், நல்லா உப்பு ஓரப்பா காளான் குழம்பு வெச்சுத் தருவாங்க. சூப்பரா இருக்கும். ஒன்னு ரெண்டுன்னா, இரும்புக் கரண்டியில ஒடச்சுப் போட்டு வணக்கிக் (வதக்கி) தருவாங்க. இப்போ பட்டன் காளான் வாங்கி சமைக்கற ஒவ்வொரு முறையும், ஆசை ஆசையா அலைஞ்சு திரிஞ்சு வரப்பு வாய்க்கால்ன்னு தேடித் தேடி, காளான் கொண்டு வந்தது தான் நியாபகம் வரும். அது என்னமோ தெரியல, அப்போ சாப்பிட்ட காளான் குழம்பு  தான் இப்போ வரைக்கும் ஆஹா ஓஹோன்னு சொல்ல வைக்குது.
அப்புறம் குமுட்டி செடிங்க... குமுட்டிக் கீரை பேரைக் கூட இப்போதைய தலைமுறை பிள்ளைகள் கேட்டிருக்க மாட்டாங்க. இதுவும் மழை காலத்தில் மட்டுமே முளைக்கும். அதுவும் நீர் பாசனம் அல்லாத மேட்டுகாட்டு நிலத்தில் தான் அதிகம் முளைக்கும். எங்க அம்மா சீலைத் தலைப்புல பை மாதிரி முடிந்து, அதுலதான், அப்படியே பச்சை பசேல்ன்னு இளசா இருக்க கொழுந்துக் கீரையா பார்த்து பார்த்து பறிச்சிட்டு வருவோம். குமுட்டி, பண்ணைக் கீரை பறிக்கறதுக்குன்னே ஒரு gang சுத்திக்கிட்டிருக்கும். எங்க வீட்டுல அப்போல்லாம் கம்பஞ்சோரும் குமுட்டிக் கடைசளும் தான் காம்போ (combo). சும்மா சொல்லக்கூடாது, அம்புட்டு ருசியா இருக்கும்.
இப்பொல்லாம் மழையும் சரியா பெய்யறது இல்ல, காளானும், குமுட்டியும் முளைக்கறதே இல்ல. காட்டு நிலங்கள்ள பூச்சு மருந்த தெளிச்சு தெளிச்சு, கொஞ்ச கொஞ்சமா இயற்கையை கொன்னுக்கிட்டு இருக்கோம். பத்தாததுக்கு இந்த gadget-டுகல்...
குமுட்டி (மண்) அடுப்பில் சமைத்து, குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து, வாழை இலை போட்டு, அரட்டை அடிச்சிட்டே சாப்பிட்டு, ஒரு சின்ன விஷேசம்னா கூட கோழி அடிச்சு குழம்பு வெச்சு, எல்லாருமா சேர்ந்து கலகலன்னு, சந்தோசத்த கொண்டாடின காலம் போய், 24/7 gadgets -சோடு புழங்கி, மொபைலும், tab-ம், லப் டாப்பும் தான், நம் குடும்பமாக மாறி, சாப்பிடும்போதும் தூங்கும்போதும் கூடவே இருந்து, நம் சந்தோசத்தையும் துக்கத்தையும் தீர்மானிக்கும், உணர்வுமாகி நம்மை இயக்கும் நிலை வந்துவிட்டது. மனிதனுக்கும் மனிதனுக்குமான பேச்சும், உறவும் குறைந்து போய், மனிதனுக்கும் மெசினுக்குமான உறவு பலப்பட்டு விட்டது.
இப்படியே போனால் நம் பிள்ளைகளுக்கு உறவினர்களும், உறவுகளும் என்னவென்றே தெரியாது, புரியாது போய்விடும்.
இப்போதே தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, என எல்லா உறவுகளையும் "skype"-ல் தான் காட்டி சொல்லிக் கொடுக்கிறோம். ஆடு மாடு, கோழி என எல்லாவற்றையும் கார்ட்டூனாக மட்டுமே காட்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால், அம்மா-அப்பாவைக் கூட வெறும் "gadget" ஆக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம் பிள்ளைகள்.
மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இனி நம் உறவுகளுக்கு கொடுப்போம். 
சுற்றமும் நட்பும் சூழ இயற்கையோடு ஒன்றி இனிதாக வாழ முயற்சிப்போம். 

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...