Tuesday, December 16, 2014

நாங்கல்லாம் கார் ஓட்டினா... episode - 2

சீட்ல ஏறி உட்கார்ந்தேன். எப்படியும் அந்த ஆன்ட்டி, அவங்கள இன்ட்ரோ பண்ணிக்கிட்டு கொஞ்சம் நேரம் எதாவது பேசுவாங்கன்னு பார்த்தா, எடுத்த எடுப்பிலேயே, சீட் கம்போர்ட்டா இருக்கான்னு கேட்டுட்டு, "can u find the break and gas?" ன்னு கிளாஸ ஆரம்பிச்சுட்டாங்க. பேசிகிட்டே கொஞ்சம் ஜாலியா ஒப்பி அடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். கொஞ்ச நேரம் எதுவும் புரியாம, அப்புறம் குனிந்து பார்த்து, "yes yes"ன்னு தலைய நல்லா ஆட்டிட்டு, ரெண்டு காலையும் தூக்கி, "பிரேக்"ல ஒரு காலையும்,  "accelerator (gas)"ல ஒரு காலையும் (அதுல எது பிரேக், எது காஸ்ன்னு வேற அப்போ தெரியல) வைத்துக் கொண்டு, "ya its perfect"ன்னேன்,  சின்ன ஸ்மைலோட (smile :-) ), ரொம்ப கரெக்டா பண்ணிட்ட மாதிரி. அவங்க எட்டி பார்த்து ஷாக் ஆகி, "No no, u should use only the right leg for both"ன்னாங்க. பாவம், அவங்களால வேற என்ன சொல்ல முடியும், இப்பதான் புரிஞ்சிருக்கும் எனக்கு கார் பத்தி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும்ன்னு. அப்புறம் indicator எப்படி போடணும், gear எப்படி மாத்தனும்ன்னு ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு சொல்லிக் கொடுத்தாங்க. பெறவு, டப்புன்னு "press the break and start the car"ன்னுடாங்க.ஸ்டார்ட் த காரா? கீழையும் மேலையும் குனிஞ்சி நிமிர்ந்து தேடி பார்க்கறேன், கார எதுலங்க ஸ்டார்ட் பண்றது, அத சொன்னாதான தெரியும் :-(. கொஞ்ச நேரம் நான் தடுமாறரத பார்த்துட்டு அவங்களே சாவிய திருப்பி கார ஸ்டார்ட் பண்ணிடாங்க. அப்பா, ஒரு வழியா, சாவி போடுற இடத்த, என் CBI மூளையை use பண்ணி கண்டுபிடிச்சிட்டேன். :-)
இப்போ லேசா பிரேக்ல இருந்து கால எடுன்னாங்க. கார் லைட்டா move ஆக ஆரம்பிச்சது. ஹை, அதுக்குள்ள சூப்பரா கார் ஓட்ட  ஆரம்பிச்சிடோமேன்னு சந்தோசத்துல், ஸ்டீரிங்க பிடிக்க மறந்துட்டேன். எப்டியும் ஒரு கையில அந்த ஆன்ட்டி ஸ்டேரிங்க பிடிசிருந்தாங்க, அதனால பிரச்சனை இல்லை. ஸ்ஸப்பா இப்போவே நமக்கு கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சே... இந்த கார் ஓட்டுறதுல இவ்ளோ கஷ்டம் இருக்கும்ன்னு முன்னையே தெரியாம போய்டுச்சுங்க. பிரேக்க கவனிச்சா, ரோட்ட கவனிக்க முடியல. ரோட்ட கவனிச்சா, எது பிரேக், எது ஆச்செலரேட்டர்ன்னு மறந்து போயிடுது. முடியலடா சாமி, எப்படா என்ன திரும்ப வீட்டுக்கு விடுவாங்கன்னு, பள்ளிகூடத்து புள்ள மாதிரி பீல் பண்ண வெச்சிடாங்க, கார எடுத்த ஐஞ்சு நிமிஷத்துலயே...!!! ;-(
எப்படியோ ஒரு அரைமணி நேரத்துக்கு அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா, இந்த indicator எங்க எங்க போடணும்; பிரேக், காஸ், ரெண்டுக்குமான வித்யாசம்; சிக்னல்ல எப்படி நிறுத்தறதுன்னு மெதுவா புரிய ஆரம்பிச்சது. ஆனாலும், முக்கியமான அந்த "ஸ்டேரிங் கண்ட்ரோல்" மட்டும் இப்போ வரைக்கும் புடிபட  மாட்டேன்குது. அன்னைக்கு ஒரு ரெண்டு மணி நேரம் இப்படியே ஓட்ட விட்டாங்க! U-turns போட கத்துக் கொடுத்தாங்க, ஆனாலும், இன்னும் நாம எதையுமே ஒழுங்கா கத்துக்கல. எல்லாத்தையும் ஒரே நாள்ல கத்துகிட்டா, பாவம், இந்த driving school வெச்சு நடத்துறவங்க எல்லாரும், எப்படி பொழைக்கறதுன்ற நல்ல என்னத்துல, பொறுமையா கத்துக்கலாம்ன்னு விட்டுட்டேன்.
ரொம்ப லென்த்தா போகுதா? சரி சரி... இத்தோடு முடிச்சிக்கறேன்... நானும் போய் "ஒரே நாளில் கார் கற்றுக்கொள்வது எப்படி"ன்ற புத்தகத்த படிச்சு, ஒரே பாட்டுல ரஜினி பணக்காரர் ஆகுற மாதிரி, இந்த blogger சரண்யா, ஒரே நாள்ல கார் கத்துக்கிட்டு... கத்துக்கிட்டு... வேற என்னங்க பண்ணப் போறோம், நானும் என் பையனும் ஜாலியா ஊற சுத்துவோம் (ரிஸ்க் எடுக்குறதெல்லாம் சஞ்சு குட்டிக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!!!).  இதுக்குமேல என்ன சொல்ல... அடுத்த க்ளாஸ் போயிட்டு வந்து, நடக்கப் போற ரணகளத்த,  குதுகலமா சொல்றேன்.... Bye... :-)
பின்குறிப்பு: என்னடா, எபிசொட் கணக்கெல்லாம் போட்டு எழுதி இருக்கே இந்த பொண்ணு, ஒரு வேலை, வாரக் கணக்குல, மாசக் கணக்குல போகுமோன்னு மலைச்சு போய்ட்டிங்களா? உங்களுக்கு கதை சொல்லி, கதை எழுதி ஒரு "பெரிய" கதாசிரியர் (Novelist!!? ) ஆகனும்ன்னு "பிளான்" எல்லாம் போட்டு வெச்சிருக்கேன் :-). so... ப்ளீஸ்... படிச்சிட்டு உங்க feedbacks சொல்லுங்க... தேங்க்ஸ்!

Monday, December 15, 2014

நாங்கல்லாம் கார் ஓட்டினா...

இந்த ஊருல கிட்டத்தட்ட மூணு வாரமா மழையா பெய்யுதுங்க. என் பையன் பாவம் வெளியே விளையாட கூட போக முடியாம, எப்போ பார்த்தாலும் "TAB"ம் கையுமாவே இருக்கான். எத்தன தடவைதான் அந்தக் கண்ணாடி கதவைத் தட்டித் தட்டி "rain rain go away"ன்னு பாடிட்டிருப்பான். அவனுக்கும் போர் அடிக்கும்ல. மழையே இல்லாம காய்ந்துப் போய் கிடக்குற நம்ம சொந்த ஊரு பக்கம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன, முடிந்தால் நிறையவே), இந்த மழையை பார்சல் பண்ணி அனுப்ப முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். ஒரு நாள், ரெண்டு நாளுன்னா, மழை பெய்யரதப் பார்க்கறதே, ரொம்ப ரசனையா தான் இருக்கு, அதுவே மாசக் கணக்குலன்னா, தாங்காதுடா சாமி... அதுவும் நான் கார் ஓட்டிக் கத்துகிட்டு, licence வாங்க ஆவலா (?!) இருக்கற இந்த சமயத்துல, இப்படி விடாம பெய்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்.
 ஏம்மா இப்படி ஏதேதோ வெட்டி பேச்சு பேசிட்டிருக்கன்னு மட்டும் கேட்டுறாதிங்க ப்ளீஸ், வெட்டியா இருக்கறதும், வெட்டியா பேசறதும், topic எதும் இல்லாம இப்படி வெட்டியா எதாச்சும் எழுதறதும் எவ்வளோ கஷ்டம்ன்னு, வெட்டியா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்.! (யாருக்காச்சும் புரிஞ்சுதா பாஸ்? ).
சரி, கோபப்படாதிங்க. இப்போ சீரியஸா எதாச்சும் பேசலாமா? ம்ம்ம்... இருங்க இருங்க மூளையை கசக்கி யோசிக்கறோம்ல!!! ஓகே போன வாரம் "உலக வரலாற்றில் முதன் முதலாக" நான் கார் ஓட்டக் கத்துக்கறதுக்கு க்ளாஸ் போயிருந்தேன்ங்க (அட நிஜமாதான்). அந்த வரலாற்று நிகழ்ச்சியத்தான் கொஞ்சம் கிண்டிக் கிளறப் போறேன் இப்போ. (என்னடா இதையெல்லாம் வரலாறுங்கிறேனேன்னு பார்க்கிறீங்களா, நாங்கல்லாம் ஸ்டீரிங்க பிடிக்கறதே ஒரு வரலாறுதானங்க.). இது ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம், so... கொஞ்சம் சீரியஸா படிக்கறீங்க...!! :-)
இந்த ஊருல கார் driving licence வாங்கணும்னா முதல்ல ஒரு driving written test எழுதி பாஸ் பண்ணனும். அதுக்கு  apply பண்றதுக்கு என்னன்னமோ process இருக்குங்க, அதையெல்லாம் எங்க வீட்டுக்காரர் பார்த்துக்கிட்டார் (இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் நம்ம மூளையை கசக்ககூடாது). நம்ம காரியதுல்ல மட்டும் கண்ணா இருக்கணும்னு முடிவு பண்ணி, கஷ்டப் பட்டு, சோறு தண்ணி இல்லாம (விரதம் இருந்து - நான் இல்லைங்க, என் வீட்டுக்காரர் !! ;-)), ராத்திரி பகல் பாராம, படிச்சி, ஒரு வழியா கலெக்டர் எக்ஸாம பாஸ் பண்ணியாச்சு (அதுவும் first attempt லயே - note this point your honor).
Written test பாஸ் பண்ண உடனே, என்னமோ licenceயே கையில வாங்கிட்ட மாதிரி நினைப்பு, ஹோ... writtenயே பாஸ் பண்ணிட்டோம், கார ஓட்டறது என்ன பெரிய விஷயமான்னு கொஞ்சம் தெனாவெட்டாதாங்க திரிஞ்சிடிருந்தேன். இதுல அப்பப்போ "ஏங்க இப்படி ஓட்டறிங்க, அப்படி திருப்பக் கூடாதுன்னு, ஸ்பீட் லிமிட்க்கு மேல போறீங்க"ன்னு வீட்டுக்காரருக்கு கொஞ்சம் ப்ரீ அட்வைஸ அள்ளி விட, பாதிப்படைந்த மனுஷன் (பொறாமையில) "நீ சரிப்பட்டு வரமாட்டன்னு" சொல்லி ஒரு driving schoolக்கு போனப் போட்டு கிளாஸ்க்கு புக் பண்ணிட்டார் (;-( ).
போன வாரம் சனிக்கிழமை முதல் கிளாஸ். ஒரு ஆண்ட்டி (கொஞ்சம் பாட்டி தான், இருந்தாலும் பியூட்டியா இருந்தனால ஆண்ட்டின்னே சொல்லிக்கறேன் - எங்களுக்கும் rhymingஆ பேச வருமுல்ல!!!) தான் கத்துக் கொடுக்க வந்திருந்தாங்க. சரி எப்படியும், ஒரு கிளாஸ் (one class - 2 hours) எப்படியும், எப்படி ஸ்டீரிங் பிடிக்கறது, எப்படி சீட் அட்ஜஸ்ட் பண்றதுன்னு, தியரியா தான் எனக்கு சொல்லிக் கொடுக்கப் போறாங்க, அதனால இன்னைக்கு எப்டியும் ஓட்டுறதுல இருந்து தப்பிச்சிடலாம்ன்னு நினைச்சேன்.
காலைல 10.30க்கு அப்பாயின்மெண்ட். 10.25கெல்லாம் ஷார்ப்பா வந்து, அபர்ட்மெண்ட் கேட் பக்கத்துல அவங்க வண்டிய நிறுத்திட்டு கால் பண்ணாங்க. நாங்க கிளம்பிப் போனதும், "Learner's permit"அ வாங்கி வச்சிக்கிட்டு, என்னைப் பார்த்து "come and sit"ன்னு டிரைவர் சீட்டைக் காட்டினாங்க. எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சி. அவ்ளோ நாள் சும்மா ஜாலியா உதார் விட்டுகிட்டிருந்த என்னை எடுத்த எடுப்பில் டிரைவர் சீட்ல உட்கார சொன்னா, என்ன செய்யறது நான். கொஞ்சம் நேரம் பதறிப் போய், என் புருஷனையும், காரையும், அந்த ஆண்ட்டியையும் மாறி மாறிப் பார்த்துட்டு, வேற வழி இல்லாம ஏறி உட்கார்ந்தேன். சத்தியமா சொல்றேங்க பண்ணிரண்டாவது முழுப் பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம போய் உட்கார்ந்தா, வயித்துக்குள்ள ஏதோ ஒன்னு பிசையுமுள்ள, அப்படி ஒரு bad feeling :-(, இத்தனை வருஷத்துல, இதுக்கு முன்னாடி, விளையாட்டா கூட, எந்த கார்லயும் டிரைவர் சீட்ல உட்கார்ந்தது இல்ல (தெரியாத்தனமா எதுலயாவது கையோ, காலோ பட்டு, கார் நகர்ந்து போய் எதுலயாவது மோதிடுச்சின்னா).
(இதுக்கு மேலக் கதைய நாளைக்கு continue பண்றேங்க)...

Monday, November 10, 2014

ஞாயிற்று கிழமை வந்தாலே...

அப்போதெல்லாம் ஞாயிற்று கிழமை வந்தாலே செம குஷியா இருக்கும். பள்ளிக்கூடம் லீவுன்றது ஒரு பக்கம் இருந்தாலும் பொண்டு பொடுசுங்க எல்லாம் சேர்ந்து குதித்தாளம் போடலாமே, அதுதான் முக்கியமானது. ஒன்னு நாம பக்கத்து வீட்ல இருப்போம், அல்லது அவங்க நம்ம வீட்ல இருப்பாங்க. இல்லன்னா நானும் வேலை செய்யறேன்னு எதாவது எடுபுடி வேலை செஞ்சிட்டிருப்போம் (அது கூட ஒரு செம entertainment-தாங்க).
அப்போல்லாம் வாசல்ல மண் அடுப்பு கூட்டி தான் சோறு பொங்குவாங்க. பொதுவா நாங்க வளர்க்கற கோழிச் சேவலுங்கள்ள ஒன்ன புடிச்சி, அடிச்சி, தென்னஞ்சோவையை பற்ற வெச்சு, அடிச்ச சேவல வாட்டுவாங்க. சேவலோட பொங்கு முடி பொசுங்கும்போது வரும் கருகு வாடை காற்றோடு கலந்து மூக்கில் ஏறும். வாட்டின பொறவு மஞ்சத் தூள் போட்டு நல்லா கழுவி எடுப்பாங்க. அது வரைக்கும் எங்க தாத்தா பின்னாலேயே நின்னுகிட்டு, குளிருக்கு கைய கட்டியிருப்பாங்களே, அது மாதிரி குறுக்கால கட்டிக்கிட்டு, குறு குறுன்னு கோழியையே கண்ணெடுக்காம பார்த்துட்டிருப்பேன். "கண்ணு, போயி மஞ்சப்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வா"ன்னு சொன்னா போதும், குடு குடுன்னு ஓடி போய், கீழ பாதி மேல பாதின்னு கொட்டிகிட்டு கொண்டு வருவேன் (அதுக்கு ஒரு திட்டு விழுந்தாலும், அதையெல்லாம் யாரு காதுல வாங்குனது..!? :-)). அவ்வளவு அவசரம், நாம வர்றதுக்குள்ள எதாவது பண்ணிடுவாங்களோன்னு (class-அ மிஸ் பண்ணிட கூடாதுல்ல). அப்புறம் என்னை சேவலோட கழுத்த தூக்கி பிடிக்க சொல்லுவாங்க. பெருசு பெருசா ரெண்டு வாழை இலை அறுத்து வந்து, ஒன்னோடு ஒன்னு சேர்த்தது போல போட்டு, அது மேல கறி நறுக்குற கட்டைய வெச்சு, அந்த கட்ட மேல சேவல வெச்சு, அதுக்குன்னே இருக்கற பெரிய கொடுவாள்ல நறுக் நறுக்குன்னு வெட்டித் தனித் தனியா குவிச்சு வைப்பாங்க. 
இதோட நம்ம வேலை முடிஞ்சுது. அதுக்கப்புறம் இந்த சமையல் section பக்கமெல்லாம் நாம எட்டி கூட பார்க்கமாட்டோம் (அது வேற department ! ;-)). எங்க, அத எடுத்துட்டு வா, இத நுணுக்கிட்டு வான்னு, கூப்பிட்டுருவாங்கலோன்னு பம்பிகிட்டே நிப்பேன். அப்போன்னுதான், கரெக்டா எங்க அண்ணன கூப்பிட்டு, "டேய், போயி சின்னத் தென்ன மரத்துல ஒரு எளந்தேங்கா பறிச்சிட்டு வா"ன்னு சொல்வாங்க. இந்த சான்ஸ நாம விடுவமா, அவன் சரின்னு தலைய ஆட்டுறதுக்குள்ள  நான் கீழ் தென்ன மட்டைய பிடிச்சிட்டு தொங்கிட்டிருப்பேன், மரம் ஏர்றதுக்கு. 
எங்க அம்மா ஒரு காயின்னு சொன்னா, நான் எப்படியும் ரெண்டு மூணு காயாவது பிடுங்கி போட்டு, தூக்க முடியாம தூக்கிட்டு போவேன். "எதுக்கு புள்ள இத்தன தேங்கா"ன்னு ஷாக்-ல வாயடைச்சு நிப்பாங்க. அப்புறம் எப்படியும் ஒரு ரெண்டு காய உரிச்சு, ஒடச்சு, தண்ணிய புல்லா குடிச்சிட்டு, அம்மா இந்தா தேங்கான்னு கொடுப்பேன். அதுக்குள்ள, அங்க பெரிய குண்டாவுல குழம்பு ரெடியா கொதிச்சிட்டிருக்கும். குழம்பு குடிக்கறவங்க வாங்கன்னு எங்கம்மா கூப்பிடுறதுக்குள்ள, நாங்கல்லாம் பெர்பெக்டா, அடுப்ப சுத்தி ஆஜர் ஆகிடுவோம். 
உடைச்ச தேங்காவுல இருக்கற பருப்ப நோண்டி தனியா எடுத்துட்டு, ஆளுக்கொரு தொட்டிய (தேங்காய் ஓட்டினை தென்னந்தோட்டின்னு பேச்சுவழக்குல சொல்வோம்) கையில கொடுத்து, அதுல குழம்பு ஊற்றுவாங்க. (அது ரசத்தின் தடிப்பில் இருக்கும், குழம்பிற்கு தேங்காய் அரைத்து விடும் முன்பு, மசாலா பொருட்களில் வெந்த நீர், கொஞ்சம் காரமாக, சூப்பராக இருக்கும்). யாருக்கு அதிகமா இருக்குன்னு அதுக்கொரு சண்டை வரும் அப்போ. எப்படியும் எனக்கு தான் அதிகமா இருக்கும், இருந்தாலும், ஒவ்வொருத்தரோட தொட்டியையும் செக் பண்ணி பார்த்துட்டு தான், நாங்க குடிப்போமுல்ல!. எப்படியும் ஒரு ரெண்டு வாய் குடிச்சிட்டு, சுடுது, கார்க்குதுன்னு, எங்க அம்மகிட்டயோ, சித்திகிட்டயோ கொடுத்துட்டு ஓடிடுவேன். அதுக்கு இவ்வளவு பில்டப்பு...!!!
அதுக்கப்புறம் எப்படியும் சாப்பாடு ரெடி ஆக மதியான நேரம் ஆகிடும்.
நல்லா சாப்பிட்டுட்டு, எல்லாரும் வெப்ப மரத்தடியில் கயித்துக் கட்டில போட்டு, உட்கார்ந்து கதை பேசிட்டிருப்பாங்க. நான் நல்ல கதை கேட்டுகிட்டே என்னோட ஆட்டுக்குட்டிக்கு பேன் பார்த்துட்டிருப்பேன் (!! :-) ). அப்புறம் சாயங்காலம் இருட்டுற வரைக்கும் பிஸியா "வேலை?" பார்த்துட்டு, அடுத்த நாள் பள்ளிகூடம் போகணும்கிற நெனப்புல, எப்போடா அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரும்ன்னு நினைச்சிட்டே homework பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுவேன் (நம்புங்க மக்களா, நாங்களும் படிச்சோமுள்ள !!! ).

Wednesday, September 17, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 3

இன்னைக்கு இங்கே செம மழை... நினெச்சே பார்க்கல இந்த ஊருல இப்படி ஒரு மழைய பார்ப்போம்ன்னு. இந்த ரெண்டு நாளா அடிச்ச வெயிலுக்கு இன்னைக்கு மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுச்சி. கை விரல் முழுகுற அளவுக்கு வெளியில தண்ணி தேங்கி இருக்குன்னா பார்த்துகோங்களேன். இந்த மாதிரி மழைய பார்த்து பல வருஷங்கள் ஆச்சு.
என் பையன் ஓடி ஓடி வாசப்படிகிட்ட நின்னு தேங்கி ஓடுற மழைத் தண்ணிய பாக்கறதும், லேசான சாரல் பட்டு சிலிர்கறதும், திருட்டுத் தனமா இறங்கி விளையாட முயற்சிக்கறதும், இடி இடிச்சா ஓடி வந்து கட்டி பிடிச்சிக்கறதும், திரும்பவும் ஓடிப் போய் "rain rain go away..." ன்னு பாடறதும்... ப்பா...! ஏதோ செம ஜாலி படம் பார்த்த மாதிரி இருக்கு. இங்க வந்து இந்த ஒன்றறை வருஷத்துல இந்த மாதிரி சல சலன்னு கொட்டுற மழைய பார்க்கவே இல்லை (feeling !!!). எப்போவாவது லேசா தலை காட்டிட்டு (அதும் correctஆ weekend morning-ஆ பார்த்து) போற மழை இன்னைக்குதான் நல்லா தலையை ஆட்டியிருக்கு. ஆமாங்க, அடிச்ச காத்துல பாதி மரங்கள்ல இலை தலையையே காணோம். பாதி மரங்கள் ரோட்ல தான் கிடக்குது.
தேங்கின மழைத் தண்ணிய பார்த்ததும் பெரிய இவ மாதிரி வாடா கப்பல் விடலாம்ன்னு, news paper ல கப்பல் செய்ய try பண்ணி, எப்படி செய்யறதுன்னு மறந்து போய் ஒழுங்கா வராம, பேப்பர கசக்கி உருட்டி, இந்தாடா கப்பல்ன்னு கொடுத்தேன் ( !! ). நான் அந்த கப்பல ( !? ) செய்து முடிக்கற வரைக்கும், கப்பல் கப்பல்ன்னு கத்திக்கிட்திருந்தவன், அத கையில வாங்கியதும் "இது boll" ன்னு (ball அ  எப்போவும் ஐயா boll ன்னு தான் சொல்லுவாரு - அமெரிக்கன் இங்கிலிபிஷ்) என் மேலேயே எறிஞ்சிட்டு போய்ட்டான் (அச்சச்சோ பையன் வளர்ந்துட்டான் !!! ). இனிமேட்டு நோ ஏமாத்துபயிங்.... :-(
இந்த ஊரே (San Diego) பள்ளத்தாக்குகளில் தான் அமைந்துள்ளது. அதுவும் நிறைய இடத்தில் மலை உச்சி முகடுகளை சமன் படுத்தி apartments அல்லது தனி வீடுகள் கட்டியிருப்பார்கள். சின்னச் சின்ன மலைகளும் அதன் சரிவுகளும், ஆங்காங்கே இருக்கும் தொடர் வீடுகளும் (எல்லா வீடுகளுக்குமே பொதுவாக ஒரே மாதிரி கண்ணை உறுத்தாத வெளிர் நிறம்தான் கொடுத்திருப்பார்கள்),  புதிதாக பார்பவர்களுக்கு கொள்ளை அழகு. ஆனால் அவ்வளவு அழகையும் கோடை வெயிலால் காய்ந்த செடிகளும், புதர்களும், சருகுகளும் மறைத்து ஏதோ வனாந்திரம் போலத்தான் இருந்தது. இந்த மழைக்கு இனி ஊரே பார்க்க செளுசெளுப்பா இருக்கப் போகுது, மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் பசுமையாப் பார்த்தாதானே சூப்பரா இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் மழைத்துளி பட்ட மலைகளில் எல்லாம் பச்சை கோர்த்து எங்கும் சில் சில்லுன்னு இருக்கப் போகுது. மழையே அழகுதான், அதுவும் மழை பொழிந்த பிறகு பசுமை படர்ந்த இயற்கை மிக மிக அழகு... அப்புறம் ஒவ்வொரு weekend -ம் பச்சை பசேல்ன்னு தெரியற இடங்கள கிளிக் பண்ண ஜாலியா கிளம்பிடுவோம். :-)
மழை விட்டதும் "அம்மா தண்ணி போச் தண்ணி போச்..." ன்னு மேலே வானத்தை கை காட்டினான் சஞ்சு குட்டி. இனிமே "rain rain where did you go/ sanjay wants to play with you/ come again very soon/ to give us the happy boon"ன்னு பாட கத்துக் கொடுக்கணும்...!

Sunday, August 24, 2014

வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு....

பொதுவாக இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் பெரும்பாலும் படித்து முடித்ததும் பெரு நகரத்தில் நல்ல வேலை கிடைத்து, ஹாஸ்டல் அல்லது நான்கைந்து பேர் சேர்ந்து வீடு எடுத்துத் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் வேலை நேரம் போக மீதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் சில ஐடியாக்கள்...
  • காலை சென்று மாலை (9 to 6 day time job without shift) திரும்பும் பெண்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நல்ல tailoring workshop இருந்தால், அங்கே உங்களுக்கு விருப்பம் உள்ள embroidery, stitching, அல்லது ஜம்கி வேலைகள், குரோசே வேலைகள் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தால் பக்கத்தில் இருக்கும் பப்ளிக் லைப்ரரியில், membership card வாங்கி பிடித்த புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். 
  • எளிமையான அதே சமயம் உபயோகமான (உங்கள் வேலை சம்பந்தமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை) கம்ப்யூட்டர் கோர்ஸ், Photoshop, graphics, போல எதாவது கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு விசேஷத்தில், அல்லது tour போகும்போது எடுக்கும் போட்டோக்களை, நீங்களே அழகாக வடிவமைத்து, உங்கள் வீட்டினரை அசத்தலாம் (முக்கியமாக திருமணத்திற்குப் பின்). அவர்களுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் கூடுதால் சந்தோஷம்.
  • எதாவது சமையல் வகுப்புகள் (cooking class) சென்று புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளலாம். இது இன்றையப் பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது. திருமணம் ஆன பின் மிகவும் தேவைப்படக் கூடிய, பயன்படக் கூடிய ஒன்று. 
  • அழகு நிலையம் சென்று உங்களை நீங்களே எப்படி சரியாக இடத்திற்கேற்ப, அழகுப் படுத்திக் கொள்வது (presentable) என்று கற்றுக் கொள்ளலாம். நீங்கள் தினமுமோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ, அரைமணி, ஒருமணி நேரம் என உங்கள் விருப்பம் போல கற்றுக் கொள்ளலாம்.
  • Drawing, Painting, Sewing, Crafting, Mehandi, Decorations, Dance, Music, என உங்களுக்கு எதில் ஆர்வமோ அதைக் கற்றுக் கொள்ளலாம். 
தினமும் அல்லது வார இறுதியில் ஒரு மணி நேரம் சென்று கற்றுக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே உங்களுக்கு என்று கிடைத்திருக்கும் பொன்னான நேரம் இது மட்டும்தான். படிக்கும் காலத்தில், படிப்பதற்கே நேரம் முழுவதும் போய்விடும், திருமணத்திற்கு பின், இது போலவெல்லாம் கற்றுக் கொள்ள நேரமும், சூழ்நிலையும் அமையாமல் போகலாம். அதனால், உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள, வடிவமைத்துக் கொள்ள, உங்கள் திறமைகளை வெளிக்கொணர, இதுதான் சரியான . காலம்.
புதிது புதிதாக கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்கு எப்போதுமே போர் அடிக்காது. அதனால் உங்கள் மனம் வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபடாது. உங்கள் வேலைப் பளுவின் "tension, stress" குறைய மிகச் சிறந்த வழி இது. எடுத்துக்காட்டாக, நீங்களே உங்கள் கையால் நீங்கள் கற்றுக் கொண்ட கலை மூலம் ஒரு "sweater" தைத்து உங்கள் அண்ணன் மகளுக்கோ, அக்கா குழந்தைக்கோ கொடுத்தீர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள், அவர்கள் எவ்வளோ மகிழ்ச்சி அடைவார்கள். என் தங்கை வேலைக்கு போய்கிட்டே, கிடைக்கற நேரத்தில் இதை பின்னிக் கொடுத்தாள்ன்னு வாழ்க்கை முழுவதும் பத்திரமாக, உங்கள் நியாபகார்த்தமாக வைத்திருப்பார்கள். உங்களுக்கும் உங்கள் நேரத்தை உபயோகமாக பயன்படுத்திய, அதே சமயம் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கும்.
தோழிகளோடு பேசி, சிரித்து, டிவி பார்த்து, மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே சமயம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் திட்டமிட்டு கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முழுதும் அந்தக் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் உங்கள் கூடவே வரும். 

Friday, August 22, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 2

மழைக் காளானும் குமுட்டியும்

நல்ல மழை பெய்தால் வரப்பு ஓரங்களில் மொட்டு மொட்டாக காளான்கள் முளைக்கும். மழைப் பெய்த அடுத்த இரண்டு மூன்று நாட்களில், ஈரம் காய்வதற்கு முன்னே, கொஞ்சம் மேடான வரப்போரங்களில், ஓடைக் கரையில், வாய்க்கால் பகுதிகளில், ஒன்று இரண்டு காளான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, முட்டிக் கொண்டு வரும். அது முளைத்த அன்றே பறித்தால் தான் உண்டு, இல்லையென்றால், விரிந்து,  புழு வந்து அழுகிவிடும். அதனால், மழை பெய்த அடுத்தடுத்த  நாட்களில், காலையில் எழுந்ததும் முதல் வேலையே இந்த காளான் வேட்டை தான். வரப்பு, வாய்கால்ன்னு சுத்தி அலைஞ்சு, எங்காவது காளான் முளைச்சிருக்கான்னு பார்ப்பேன். நான்தான் அப்படின்னு நினைச்சுடாதிங்க, எங்க வீட்ல எல்லாருமே அப்பப்போ தேடி பிடிச்சு, காளான்கள் கொண்டு வருவாங்க.  நிறைய காளான்கள் கிடைத்தால், நல்லா உப்பு ஓரப்பா காளான் குழம்பு வெச்சுத் தருவாங்க. சூப்பரா இருக்கும். ஒன்னு ரெண்டுன்னா, இரும்புக் கரண்டியில ஒடச்சுப் போட்டு வணக்கிக் (வதக்கி) தருவாங்க. இப்போ பட்டன் காளான் வாங்கி சமைக்கற ஒவ்வொரு முறையும், ஆசை ஆசையா அலைஞ்சு திரிஞ்சு வரப்பு வாய்க்கால்ன்னு தேடித் தேடி, காளான் கொண்டு வந்தது தான் நியாபகம் வரும். அது என்னமோ தெரியல, அப்போ சாப்பிட்ட காளான் குழம்பு  தான் இப்போ வரைக்கும் ஆஹா ஓஹோன்னு சொல்ல வைக்குது.
அப்புறம் குமுட்டி செடிங்க... குமுட்டிக் கீரை பேரைக் கூட இப்போதைய தலைமுறை பிள்ளைகள் கேட்டிருக்க மாட்டாங்க. இதுவும் மழை காலத்தில் மட்டுமே முளைக்கும். அதுவும் நீர் பாசனம் அல்லாத மேட்டுகாட்டு நிலத்தில் தான் அதிகம் முளைக்கும். எங்க அம்மா சீலைத் தலைப்புல பை மாதிரி முடிந்து, அதுலதான், அப்படியே பச்சை பசேல்ன்னு இளசா இருக்க கொழுந்துக் கீரையா பார்த்து பார்த்து பறிச்சிட்டு வருவோம். குமுட்டி, பண்ணைக் கீரை பறிக்கறதுக்குன்னே ஒரு gang சுத்திக்கிட்டிருக்கும். எங்க வீட்டுல அப்போல்லாம் கம்பஞ்சோரும் குமுட்டிக் கடைசளும் தான் காம்போ (combo). சும்மா சொல்லக்கூடாது, அம்புட்டு ருசியா இருக்கும்.
இப்பொல்லாம் மழையும் சரியா பெய்யறது இல்ல, காளானும், குமுட்டியும் முளைக்கறதே இல்ல. காட்டு நிலங்கள்ள பூச்சு மருந்த தெளிச்சு தெளிச்சு, கொஞ்ச கொஞ்சமா இயற்கையை கொன்னுக்கிட்டு இருக்கோம். பத்தாததுக்கு இந்த gadget-டுகல்...
குமுட்டி (மண்) அடுப்பில் சமைத்து, குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து, வாழை இலை போட்டு, அரட்டை அடிச்சிட்டே சாப்பிட்டு, ஒரு சின்ன விஷேசம்னா கூட கோழி அடிச்சு குழம்பு வெச்சு, எல்லாருமா சேர்ந்து கலகலன்னு, சந்தோசத்த கொண்டாடின காலம் போய், 24/7 gadgets -சோடு புழங்கி, மொபைலும், tab-ம், லப் டாப்பும் தான், நம் குடும்பமாக மாறி, சாப்பிடும்போதும் தூங்கும்போதும் கூடவே இருந்து, நம் சந்தோசத்தையும் துக்கத்தையும் தீர்மானிக்கும், உணர்வுமாகி நம்மை இயக்கும் நிலை வந்துவிட்டது. மனிதனுக்கும் மனிதனுக்குமான பேச்சும், உறவும் குறைந்து போய், மனிதனுக்கும் மெசினுக்குமான உறவு பலப்பட்டு விட்டது.
இப்படியே போனால் நம் பிள்ளைகளுக்கு உறவினர்களும், உறவுகளும் என்னவென்றே தெரியாது, புரியாது போய்விடும்.
இப்போதே தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, என எல்லா உறவுகளையும் "skype"-ல் தான் காட்டி சொல்லிக் கொடுக்கிறோம். ஆடு மாடு, கோழி என எல்லாவற்றையும் கார்ட்டூனாக மட்டுமே காட்டுகிறோம். இந்நிலை தொடர்ந்தால், அம்மா-அப்பாவைக் கூட வெறும் "gadget" ஆக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம் பிள்ளைகள்.
மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இனி நம் உறவுகளுக்கு கொடுப்போம். 
சுற்றமும் நட்பும் சூழ இயற்கையோடு ஒன்றி இனிதாக வாழ முயற்சிப்போம். 

Thursday, August 14, 2014

கொஞ்ச நேரம் கதை பேசலாம்...

திண்ணைப் பேச்சு 

எங்கள் தாத்தா வீடு அந்த காலத்தில் கட்டிய பழைய ஓட்டு வீடு. நெட்டாக நான்கு அறைகள் இருக்கும். நடுவிலிருக்கும் ஹாலை "பட்டா சாலை" என்று அழைப்போம். பட்டாசாலைக்குள் நுழைய இரண்டு வாசற்படி வைத்து, அடுத்தார் போல கதவோடு கூடிய மர  நிலவுக்கால் வைக்கபட்டிருக்கும். கதவின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஆளுயர ஜன்னல் இருக்கும். ஜன்னல் முழுவதும் பூப்போட்ட கம்பிகள் மட்டுமே இருக்கும், கதவு கிடையாது. வாசற்படியை ஒட்டி இரண்டு பக்கமும் வீட்டின் முழு நீளத்திற்கு திண்ணை வைக்கப் பட்டிருக்கும். இரு பக்கமும் ஜன்னலுக்கு அடுத்தாற்போல, இரண்டிரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். பெரிய கட்டிட வேலைப்பாடு எல்லாம் கிடையாது என்றாலும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். அந்த வீட்டோட சிறப்பே அந்த பெரிய திண்ணை தான். நாங்க பொதுவா வீட்டுக்குள்ள இருக்கறத விட இந்த திண்ணையில தான் அதிகமா புழங்கி இருப்போம். யாராவது ஒரம்பரை (விருந்தினர்) வந்தா கூட நாற்காலியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க, டக்குனு திண்ணையில ஏறி உட்கார்ந்துடுவாங்க.
வீட்டுக்கு முன்புறம் பெரிய மண் வாசல் இருக்கும், அடிக்கடி எங்க ஆயா மாட்டு சாணத்த தண்ணியில குழம்பு போல கரைச்சு வாசல வழிப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான இடுப்பொடியற வேலை. பெரிய வாசல முழுதுக்கும் வழிச்சுட்டு, சிலசமயம் முடியாம திண்ணையில படுத்துப்பாங்க, நான் தான் அப்போதைக்கு ஆயாவோட iodex, jandu balm  எல்லாம். குப்புற படுத்து, என்னை ஏறி மிதிக்க சொல்வாங்க. நங்கு நங்குன்னு நான் மிதிக்கற மிதியில, எங்க ஆயாவுக்கு வலி குறையுதோ இல்லையோ, எனக்கு நல்லா கால் வலி எடுத்துடும்.
ராத்திரி ஆனா எல்லாரும் வாசல்ல நிலா வெளிச்சத்துல வரிசையா ஆளுக்கொரு கட்டில போட்டு கதை பேசிகிட்டே படுத்திருப்போம். நானும் ஆயாவும் பாதி நேரம் வரைக்கும் கதை பேசிட்டே இருப்போம். அவங்க சின்ன புள்ளையா இருந்தப்போ இருந்து ஆரம்பிச்சு அவங்க கடைசி காலம் வரைக்கும் நடந்த அத்தனை கதைகளையும் சொல்வாங்க. நிலா வெளிச்சத்துல நச்சத்திரங்கள என்னிகிட்டே ஹாயா கதை கேட்டுகிட்டே தூங்கின அந்த காலம் திரும்பவும் கிடைக்குமான்னு தெரியல.
எங்க ஆயா சின்னதுல இருந்தே சொப்புத் தயிர் வியாபாரம் பண்ணவங்க. சொப்புன்னா நம்ம வீட்டுல தண்ணீர் சோம்பு இருக்கும்ல, அது மாதிரி மண்ணுல செஞ்சது. கால்படி சொப்பு, அரைப்படி சொப்புன்னு, அளவிற்கு தகுந்தாற்போல நிறைய சொப்புகள் இருக்கும். சமையல் கட்டுக்குள்ள, நாலைஞ்சு உரியில வரிசை வரிசையா சொப்பு சட்டிங்க தொங்கிட்டிருக்கும். ஒன்னுல பால், ஒன்னுல தயிர், ஒன்னுல மோர், ஒன்னுல வெண்ணைன்னு, பார்க்கவே கலக்கலா இருக்கும். உள்ள போனாலே புது மோர், பச்சை வெண்ணை வாசனை கலவையாய் வந்து ஆளைத் தூக்கும். எனக்கும் என் கிளுஸ் பூனைக்கும் அங்கதான் வேலையே. :-)
தினமும் பொழுது விடியறதுக்குள்ள மோர் சிலுப்பி, பெரிய கூடையில அடுக்கி வெச்சு, தலையில தூக்கிட்டு, கிட்டத்தட்ட 3 மைல் தூரம் நடந்தே போய் ஊருக்குள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும் தயிர் ஊற்றிட்டி வருவாங்க. வரும்போது எனக்கு மறக்காம உருண்டை பன்னு (round bun) வாங்கிட்டு வருவாங்க. நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல அவங்க எந்நேரம் எழுந்து இத்தனை வேலையும் செய்வாங்கன்னு. இதெல்லாம் நான் ரொம்ப சின்னதா இருக்கப்போ நடந்தது, பொறவு, அத நிப்பாட்டிட்டாங்க. உருண்டை பன்னும் போச்சு :-(
என்னைக்காவது மழை வந்தா ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரே பரபரப்பா இருக்கும். ஆடு மாடெல்லாம் மழையில நனையக் கூடாதுன்னு, கட்டுத்தரையில இருந்து எல்லாத்தையும் அவிழ்துட்டு போய் மாட்டுக் கொட்டகைக்குள் கட்டுவாங்க. நானும் என்னமோ பெருசா வேலை செய்யற மாதிரி காட்டிகிட்டு, மழையில நனைஞ்சிட்டு இருப்பேன்.
மழை நேரத்துல ஓட்டு வீட்டோட பெரிய அழகே, ஓட்டின் மேல் விழுந்த நீரெல்லாம் சேர்ந்து சிறு ஓடைப் போல கீற்றுக் கீற்றாக வரிசையாக ஊற்றுவதுதான். கொட கொடன்னு ஒரே மாதிரி நெட்டாக ஊத்தறதப் பாக்கணுமே... சான்சே இல்லங்க, அவ்வளோ அழகா இருக்கும். மண் வாசலுங்கரதால, ஓட்டுத் தண்ணி ஊற்ற ஊற்ற, அது ஊற்றுகிற இடத்தில் மண் அரித்து போய், சிறு பள்ளம் ஏற்பட்டு, ஒரு சின்ன வாய்கால் போல தண்ணி தேங்கி நிற்கும்.  மழை நின்னப்பிறகும், சொட்டு சொட்டா, தேங்கின தண்ணியில  டப் டப்ன்னு விழுந்து அலை அலையா எழும்பும். திண்ணையில உட்கார்ந்து எல்லாரும் வரக்காப்பி குடிச்சிகிட்டு, கதை பேசிகிட்டே மழையையும் ரசிச்சிட்டிருப்போம். நான் காகித கப்பல் செஞ்சு அதுல விட்டு விளையாடுவேன். மழை நின்னபிறகும் என்னோட ஆட்டம் மட்டும் நிக்காது. ஓடிப் போய் ஒவ்வொரு மரமா, செடியா, உலுக்கி குலுக்கி, இலையில தேங்கியிருக்கிற நீரெல்லாம் ஒட்டுமொத்தமா சர்ருன்னு கீழே கொட்ட வெச்சு சில்லுனு நனைவேன்.
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் ரசனையாதான் அப்போதெல்லாம். நம்ம எல்லாருமே இப்படிதானே இருந்தோம், எல்லாமே நமக்கு கொண்டாட்டமா தானே இருந்தது அந்த வயதில், வளர வளர இதெல்லாம் எங்கே போய் மறைந்தது. வாழ்கையின் சின்னச் சின்ன சந்தோசங்களையும், ரசனைகளையும், கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டு, எதைத் தேடி ஓடுகிறோம்...????? இந்த ஓட்டம் திரும்பவும் பழைய கொண்டாட்டமாக மாறுமா...??? ஆவலுடன்...

Tuesday, August 5, 2014

திருட்டுத் தீனி...

சின்ன வயசுல காசு திருடி மாட்டிய அனுபவம் உண்டா உங்களுக்கு? ஆமாம் என்றால் "same pinch...". ஏனென்றால், நானும் காசு திருடி மாட்டிகொண்டு பேந்த பேந்த முழித்து "shame shame" ஆகியிருக்கிறேன்.
அப்போது நான் ஏழாவது படிச்சிட்டிருந்தேன். எங்க பள்ளிகூடத்தில அந்த வருசம் தான் புதிதாக ஒரு தீனிக் கடை ஆரம்பித்தார்கள். மதியம் "lunch-break" ல் மட்டும் அந்த சிறியக் கடை திறந்திருக்கும். கடலை மிட்டாய், சோன் பப்டி, முறுக்கு, மாவுரண்டை போன்றத் தின்பண்டங்கள் வைத்திருப்பார்கள். ஒரு பீஸ் நாலணா.
எனக்கும் தீனி வாங்கி சாப்பிடணும்னு ரொம்ப ஆசை... வீட்டில் காசு கேட்டு அடம் பிடிச்சேன். அடிதான் கொடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் அவ்வபோது கூட இருக்கிற பிள்ளைகள் வாங்கினா "share" பண்ணுவாங்க. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அவ்வளோதான்..., அதுக்கப்புறம் தினமும் எங்க சித்தி (சித்திக் கூடத்தான் தினமும் ஸ்கூல் போவேன்) purse-ல இருந்து ஒரு ருபாய் இரண்டு ருபாய்னு காசு காணமல் போச்சு  ( ;-) ).
இப்படியே ஒரு பத்து நாள், நல்லா திருட்டு தீனி வாங்கி சாப்பிட்டு (இதுல எல்லாருக்கும் sharing வேற!!! ) ஹாப்பியா போச்சு. அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை... எங்க சித்தி, ஆயா, நான் எல்லோரும் வீட்டுல இருந்தோம். சித்தி ஏதோ ஆயாகிட்ட பேசிகிட்டே அலமாரிய சுத்தம் பண்ணிடிருந்தாங்க. பேச்சுவாக்கல (அல்லது வேண்டும் என்றேவா?), ஆயாகிட்ட "இப்போல்லாம் தினமும் என் purse-ல இருந்து காசு குறையுது, யாரோ எனக்குத் தெரியாம காசு எடுக்கறாங்கம்மா"ன்னு சொல்லிட்டிருந்தாங்க. இதுக்கு நான் என்ன reaction கொடுத்திருக்கணுங்க? வாய மூடிகிட்டு என் வேலைத்தான பார்க்கணும்.., ரொம்ப அறிவுக்கொழுந்துங்க நான்... அவங்க சொல்லி முடிக்கறதுக்குள்ளயே "சத்தியமா உங்க purse-ல இருந்து காசு நான் எடுக்கவே இல்ல சித்தி"னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சேன். அவங்க ரெண்டுபேருக்கும் shock. கொஞ்ச நேரம் எதுமே பேசாம ரெண்டு பேரும் என்னையே பார்த்துட்டிருந்தாங்க. என் தலை தானாகவே தொங்கிப் போச்சு.
அதன் பிறகு அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கல ரெண்டுபேரும். அதுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய தண்டனை. "ஏன் புள்ள திருடின"ன்னு கேட்டு நாலு சாத்து சாத்தியிருந்தா கூட எனக்கு அவ்வளோ கஷ்டமா இருந்திருக்காது. அன்னைக்கோட அந்த திருட்டு எண்ணம் போயே போச்சுங்க.
அதுக்கப்புறம் இந்த மாதிரி அடுத்தவங்களோட காசு திருடுற எண்ணம் வரவே இல்லை. கொஞ்ச நாள்ல பள்ளிக்கூடத்துலேயே அந்தக் கடையை எடுத்துட்டாங்க. எனக்கு இப்போ தோணுது, என்னை மாதிரியே நிறைய பேரு திருட்டுத் தனமா தீனி வாங்க, அது அவங்க வீட்டுக்கு தெரிந்து, பள்ளிக்கூடத்துக்கு புகார் வந்து, அதனால கடையை எடுத்திருப்பார்களோ என்று.
எப்படியோ (என் மானம் போனாலும் பரவால்லைன்னு ) உங்க பிள்ளைங்க இப்படி ஏதாவது பண்ணினா எப்படி அவர்கள் தவறை அவர்களாகவே உணர வைப்பதுன்னு டெமோ பார்த்திங்களா? நல்லா இருந்துச்சா? ஓகே இதெல்லாம் ஒரு சமூக சேவை தான் பாஸ், இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கனும்! ( ;-) ).
சரி இப்போ நாட்டுக்கு சொல்ல வேண்டிய கருத்து என்னன்னா: பிள்ளைகள் எதாவது தவறு செய்தால், அவர்களைத் திட்டாமல், அடிக்காமல், அவர்களின் தவறை அவர்களாகவே உணர வைப்பதுதான் புத்திசாலித்தனம்.

Thursday, July 31, 2014

என் செல்ல மாஞ்செடியே...

ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கற மரத்துக்கும் ஒரு கதை இருக்கும். எங்க வீட்ல இருக்கற மாமரத்துக்கும் ஒரு குட்டி கதை இருக்குது. அப்படி என்ன ஸ்பெஷல், தங்கத்துலயா மாங்கா காய்க்குதுன்னு நீங்க கேக்கலாம். சத்தியமா அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க, பழம் கூட கொஞ்சம் சுமாராத்தான் ருசிக்கும். இருந்தாலும் என் மரம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தான்...
முன்னல்லாம் எங்க வீட்ல எந்த ஒரு மரமும் இருக்காது, கொட்டாய (வீடு) சுத்தி வயக்காடு (வயல்) தான்,  குச்சி (மரவள்ளிக் கிழங்கு), மஞ்சள், சோளம்,  இல்லன்னா கடலை (நிலக்கடலை) தான் நாங்க எப்போவுமே பண்ற வெள்ளாம (விவசாயம்).
எங்களுக்கு மாம்பழம் வேணும்னா, எங்கம்மா சந்தையில தான் வாங்கிட்டு வரும்.சாப்டுட்டு கொட்டைய தூக்கி வயல்ல எரிஞ்சிடுவோம் (எவ்ளோ தூரமா எறியறோம்ன்னு போட்டி வேற). அப்படி தூக்கி போட்டதுல ஒன்னு குச்சிக்காட்டுக்குள்ள (அந்த வருஷம் குச்சி தான் வெள்ளாமை) முளைச்சி, எங்க யாருக்குமே தெரியாம நல்லா ஆளுயரத்துக்கு (சும்மா build-up பண்ணேன் :-)) வளர்ந்து இருந்துச்சி. குச்சிச் செடிங்க பொதுவா ஆறேழு அடி வளரும். எட்டு மாசத்துல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள கிழங்கை அறுவடை செய்வாங்க. 
கிழங்கை பிடுங்கினதுக்கு அப்புறம் தான், வயலுக்குள்ள மாஞ்செடி வளர்ந்திருக்கறதயே பார்த்தோம். மாஞ்செடியப் பாத்ததும் என்னை கையில புடிக்க முடியல, ஒரே குஷி தான். எத்தன நாளா கேட்டிருப்பேன், ஒரு செடி வாங்கி தந்தாங்களா, இப்போ பாரு சூப்பரா ஒரு செடி தானவே வந்துடுச்சின்னு ஒரே சந்தோசம். என்னோட reaction மட்டுந்தாங்க இப்படி (கொஞ்சம் ஓவரா இருக்கோ?! ), மத்த யாரும் அந்த செடிய ஒரு பொருட்டா நெனைக்கவே இல்ல (பின்ன, வாங்கிட்டு வர்ற எல்லா பழத்தையும் நம்ம மட்டும்தான யாருக்கும் பங்கு தராம விழுங்கினோம், அப்புறம் அவங்களுக்கு எப்படி தெரியும் பழத்தோட அருமை, அந்தச் செடியோட அருமை...). எங்கப்பா வேற, இந்த செடி இங்க நடுகாட்டுக்குள்ள (நடு வயலுக்குள்) எதுக்கு, நாளைக்கு உழவு ஓட்டும்போது தொந்தரவா இருக்கும், அது வளர்ந்தா காட்டையே அடைச்சுக்கும் ,வெள்ளாம பண்ண முடியாது, பிடுங்கி போட்டுடலாம்னு சொன்னாங்க. அவ்ளோதான், எனக்கு வந்துடுச்சே கோபம்... அந்த செடிய பிடுங்கினுங்கின்னா அப்புறம் நான் உங்க யாருகிட்டயும் பேச மாட்டேன்னு அடம் பிடிச்சதுல, போய் தொலையுதுன்னு விட்டுடாங்க.
அப்புறம் ஒவ்வொரு வாட்டி எங்க வீட்டுக்கு போகும்போதும் (தாத்தா வீட்ல இருந்து) செடி வளர்ந்திருக்கான்னு ஆராய்ச்சி பண்ணி பார்ப்பேன் (அட நிஜமாதாங்க, செடி பக்கத்துல நின்னு என் ஒசரத்துக்கு (?!) அளந்து பார்ப்பேன், கிளைய கூட எண்ணி பார்ப்பேன்...) கொஞ்சமாவது வளர்ந்திருந்தா சந்தோஷம், இல்லைனா அவ்ளோதான், ரொம்ப பாவம் எங்க வீட்டு ஆளுங்க...
இப்படியே ஒரு மூணு நாலு வருஷத்துல பெரிய மரமாகிடுச்சி. ஆனா ஒரு பூ, பிஞ்சி வெக்கல. ஒருநாளு எங்கப்பா, இது வெத்து மரம், ஒன்னும் காய்க்கற மாதிரி தெரியல, பேசாம வெட்டிபுடலாம்னாங்க. எனக்கு அழுகையே வந்துடுச்சி.  ஓடி போய் மரத்த கட்டி புடிச்சிட்டு அண்ணாந்து பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டிங்க, உள்ள, தளவுள, நாலஞ்சி பூங்கொலுந்துங்க... பாத்ததும் ஒரே கொண்டாட்டம் தான், அதும் நான் தாங்க மொதல்ல பார்த்தேன் (நான் சொன்ன ஸ்பெஷல் இதுதாங்க, சூப்பருல்ல...) :-).
அப்புறம், இப்போ வரைக்கும் வருஷா வருஷம் நல்லா காய்ச்சிட்டிருக்கு. என் பையன் வயத்துக்குள்ள இருக்கப்போ தினமும் ரெண்டு மாங்காவாவது பறிச்சி சாப்பிட்டுடுவேன். எங்களோட மாம்பழ ஏக்கத்த தீர்த்து வெச்ச என் செல்ல மாமரம் இந்த வருஷமும் நல்லா காய்ச்சிருக்காம். எப்போ ஊருக்கு போன் பண்ணாலும் மாமரம் நல்லா இருக்கா, பூ விட்ருச்சா, பிஞ்சி கொட்டிடுச்சான்னு கேட்டு கேட்டே எல்லாரையும் torture பண்ணிடுவேன். சலிப்பே இல்லாம என் மாமரம், ரோஜா செடி, கருவேப்பில, எழுமிச்ச மரம், நாய் குட்டி, ஆட்டுக்குட்டிங்க, மாடு, கன்னுக்குட்டின்னு என் விசாரிப்பு பட்டியல் போய்ட்டே இருக்கும். எங்க வீட்ல இருக்கவங்கதான் தான் கடுப்பாகிடுவாங்க. ம்ம்... மறந்தே போய்டேங்க, எங்க வாசல்ல ஒரு வெலா மரம் ஒன்னு வளந்துட்டு இருந்துச்சி, அது எப்படி இருக்குன்னு இன்னைக்கு போன் பண்றப்போ கேக்கணும் (அது எப்போ தின்னுட்டு போட்ட கொட்டையோ...?!). அச்சோ நீங்க ஒன்னும் பயப்படாதிங்க, இந்த வெலாங்கன்னுக்கு கதையெல்லாம் ஒன்னும் கெடையாது. ;-)
நான்தான் இப்படி மரத்துக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கேன்னா, எங்க அப்பா எனக்கும் மேல. வீட்டுக்கு யாரு வந்தாலும் உடனே, "எம்புள்ள வெச்ச மரம்"ன்னு (தானா வளந்ததுதான், இது எங்க அப்பாவோட பில்டப்பு!!!) கதைய ஆரம்பிச்சுடுவாங்க. "அப்பா ப்ளீஸ்"னு நான் தான் கண்ட்ரோல் பண்ண வேண்டிருக்கும் (எல்லாம் ஒரு அடக்கந்தான்....). அப்புறம் எங்க மாமா (மாமனார்)..., என் வீட்டுகாரர் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்கயோ இருந்து கொண்டு வந்து வாசல்ல நட்டு வெச்ச வேப்ப மரத்த சாமியாவே நெனச்சி கும்பிட்டுட்டிருகாங்க (அந்த மரத்துக்கும் ஒரு பிளாஷ்பேக் கதை சொல்வாங்க). 
இப்டி நம்ம வீட்டு மரம் ஒவ்வொன்னும் நம்ம வீட்டுல ஒரு ஆளாவே மாறிப் போய்டுதுள்ள... அந்த மரத்தடி நிழல்ல கட்டில் போட்டு இல்லன்னா அது மேலேயே சாய்ந்து உட்கார்ந்து எவ்ளோ கதை பேசி இருப்போம், எத்தனை நாள், நம்ம களைப்பையும், அலுப்பையும் மறந்து தூங்கி இருப்போம், எவ்ளோ சந்தோசங்களை பகிர்ந்துட்டிருப்போம், எத்தன எத்தன துக்கங்களையும், கண்ணீரையும் அந்த மரத்தடியில அழுது கரைச்சிருப்போம்...
காலாகாலத்துக்கும் நின்று, என் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும், நான் வாழ்ந்த கதையை (போனா போகுது, எங்க அண்ணன் கதையையும் கூட சேர்த்துக்கோ)  சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டே இருப்பாய் என் இனிய மாமரத் தோழியே, உன்னோடு சேர்ந்து செழிப்பாக வளரட்டும் என் சந்ததிகளும்...!!!
இது எல்லா மரங்களுக்காகவும்: 
மனித சந்ததிகளை சலனமே இல்லாமல் சந்தித்துக் கொண்டே இருக்கும் மரங்களே, உங்களை அழித்தால், அழிந்து போவது இந்த மானுடமும், அது சொல்லும் வரலாற்றுக் கதைகளும் தான்...!!! 

** என்னங்க பண்றீங்க...? என்னாது...!?, நீங்களும் உங்க மரத்து கதைய எழுத ஆரம்பிச்சிடிங்களா..? ம்ம்... சூப்பர் கலக்குங்க  பாஸ்..!!! :-) **

Wednesday, July 30, 2014

பாம்பைப் பார்த்தா கூட பயம் இல்ல, இந்த அட்டையைப் பார்த்தா தான்.... :-(

சின்ன வயசுல இருந்தே இந்த அட்டைங்களக் (அட்டைப் பூச்சி) கண்டாலே எனக்கு செம பயம். என்ன பண்ணாலும் அந்த பயம் என்ன விட்டு போகமாட்டேன்குது... :-(
இப்போவும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, எனக்கு ஒரு அஞ்சாறு வயசு இருக்கும், எங்க தாத்தா ஆடு மாடுங்களுக்கு தல (ஆடு மாடுகள் தீனியாக சாப்பிடும் இலை, செடி, கொடி, எல்லாம் சேர்த்த கட்டு) கொண்டு வர்றதுக்கு பனங்காடுக்கு (பனங்காடு என்பது பனைமரக் காடு, சும்மா கிடக்கும் விவசாயமற்ற பனைமரங்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் காடு) போனப்போ நானும் அவங்க கூட ஓடி போயிட்டேன். ஆனா காட்டுக்குள்ள போக போகத்தான் உள்ள உதற ஆரம்பிச்சது.
திரும்பி வீட்டுக்கு போகலாம்னாளும் பயம், தாத்தா கூட போலாம்னாலும் பயம், ஏன்னு கேக்கறிங்களா, எல்லாம் இந்த ஊர்ற கருப்பு அட்டைங்க பிரச்சனை தாங்க, அப்டியே பெருசா நீளமா கரு கருன்னு கொச கொசன்னு மொய்க்கற கால்களோட, மழை பெய்ஞ்ச காலத்துல, புதரு மண்டிக் கடக்குற ஓட பக்கம் (சில சமயம் வீடு கட்டுதரையில), வேலி பக்கம்லாம் மெதுவா ஊறி ஊறி எங்கயாச்சும் போயிட்டிருக்கும். ஐயோ அத பாத்துட்டா அன்னைக்கு நாள் பூரா, கால கீழ வைக்கவே பயப்படுவேன். என் மேலேயே ஊர்ற மாதிரி ரொம்ப அருவருப்பா இருக்கும்.
தாத்தா வேலியில தல வெட்ட ஆரம்பிச்சிட்டாரு, எனக்குன்னா ஏதோ நெருப்பு மேல நிக்கற மாதிரி உயிர கையில புடிச்சிட்டு நின்னுட்டிருந்தேன். கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம அந்த இடத்துல எந்த பக்கம் இருந்தோ அந்த கரு கரு வில்லன் நெளிஞ்சி நெளிஞ்சி வந்தான் (பத்து அடி முன்னாலதாங்க...). அவ்ளோதான் அங்க எடுத்த ஓட்டம் தான், கால்ல செருப்பு கூட இல்லாம... கல்லு முள்ளு எதும் தெரியல (கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும்), அத்துவிட்ட மாடு மாதிரி (ஏதோ எல்லா அட்டைகளும் சேர்ந்து என்னத் தொரத்துற மாதிரி ஒரு கற்பனைல) ஓடியாந்து வீட்டு வாசப்படி ஏறித்தான் நின்னேன்.அப்புறம் தான் வலி தெரிஞ்சுது ரெண்டு கால்கள்ளையும்  பூரா முள்ளு குத்தி குத்தி ஒடிஞ்சு சிலாம்பா (ஒடிந்த முள் துணுக்கு) நின்னு போச்சு, பத்தாததுக்கு முழங்கால் வரைக்கும் கீறல்கள். அதுக்கு வேற முதுகுல நாலு வெச்சி, அன்னைக்கு பூரா முள்லெடுக்கி (முள் எடுக்க) வெச்சி குத்தி குத்தி எடுத்தாங்க. செம வலி... :-(
இன்னைக்கு அத நெனச்சா, அடச்சீ..., இதுக்கா இப்படி ஓடினோம்னு சிரிப்பு வருது, ஆனா அந்த வயசுல அது எனக்கு என்னமோ உயிர பறிக்கற விஷயமாத்தான் தோணுச்சி. யாராவது கேட்டா பாம்ப பாத்தாக் கூட பயப்படமாட்டேன் (?! :-) ), இந்த அட்டைய பாத்தாதான் உதறுதும்பேன்.
இதுல கஷ்டம் என்னன்னா நான் அட்டைக்கு பயபடுறேன்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் எதாவது குறும்பு பண்ணா, அடம் பண்ணா உடனே, அட்டைய புடிச்சி வந்து கட்டிடுவேன்னு பயமுறுத்துவாங்க எங்க அண்ணனுங்க.
நல்ல வெவரம் தெரிஞ்ச பெறகும் அந்த பயம் என்ன விட்டு போகல. ஊருல இருக்க வரைக்கும் மழை பேஞ்சா எங்க வயக்காட்டுப் பக்கம் கூட போகமாட்டேன், எங்கயாவது ஒன்னு ஊறிக்கிட்டு வந்து என் கண்ணுல பட்டுடுமோன்னு பயமா இருக்கும். இங்க அமெரிக்கா வந்த பிறகு கூட புல்வெளில நடக்குறப்போ என்ன அறியாம எங்கயாச்சும் அட்டை இருக்குமோனு பாத்துப்பேன்.
அந்த ஆழமான அட்டை பயம் (போபியா??? ) எப்படி வந்துச்சின்னு யோசிச்சுப்பாத்தா, அதுக்கான ஒரு சம்பவம் நியாபகத்துக்கு வந்துச்சு. ரொம்ப சின்ன புள்ளையா இருக்கப்போ ஒரு நாள் தாத்தா யாருகூடயோ (யாருன்னு சரியா இப்போ நியாபகம் வர மாட்டேன்றது, ஆனா அவங்க மட்டும் கையில கெடச்ச்ச்ச்ச்சா......... ;-( ) பெசிட்டிருந்தாங்க. தாத்தாகிட்ட அவங்களுக்கு ஏற்பட்ட, அட்டை ரத்தம் உறிஞ்சின experience பத்தி சொல்லிட்டிருந்தாங்க. அவங்க எங்கயோ போயிருந்தப்போ, மலை அட்டை ஒன்னு அவங்க கால்ல ஓட்டை போட்டு உள்ள போயிருச்சாம், அப்டியே கொடஞ்சிட்டே உள்ளே போக பயங்கரமா வலி எடுத்துடுச்சாம், அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு புகையிலை கசக்கி அந்த ஓட்டைக்குள்ள துணிக்க, அந்தக் காரத்துக்கு அட்டை வெளிய வந்துடுச்சாம். இத சொன்ன அவங்க கூட அப்போவே அத மறந்திருப்பாங்க,  ஆனா அங்க சும்மா கூட நின்னு கேட்டுக்கிட்டிருந்த எனக்கு அது அப்படியே மனசுக்குள்ள பதிஞ்சி போச்சு. இப்போ அத யோசிச்சா கூட அப்டியே "visual"-ஆ வந்து கண்ணுக்குள்ள நிக்குது, ஏதோ அட்டை என் கால்ல ஓட்டை போட்டு ரத்தம் உரியற மாதிரி...
இப்போ எனக்கு நல்லாவே தெரியும், அந்த மாதிரி இரத்த உறிஞ்சி அட்டையும் இருக்குன்னு, ஆனா நம்ம வாழற பகுதியில, மழை சமயத்துல தோன்றுகிற அட்டைகள் மிக சாதுக்கள் என்று. அது நம்மல ஒண்ணுமே பண்ணாதுன்னு (நம்ம அத எதும் பண்ணாம இருந்தா போதும்) நல்லாவே தெரியும், ஆனாலும் என்னால அந்த பயத்த overcome பண்ணி வர முடியல.
இந்த மாதிரி எல்லார்க்குள்ளும் ஏதாவது ஒரு பயம் சின்ன வயசுல உருவாகி இருக்கும் (கரப்பான் பூச்சிக்கு, பல்லிக்கு, பலூன்/பட்டாசு சத்தத்துக்கு, இருட்டுக்கு, சிலருக்கு தேங்கி இருக்கும் தண்ணிய பாத்தா கூட பயம் வரும்) , அதைய நம்ம வீட்ல இருக்கவங்க, திரும்ப திரும்ப (விளையாட்டுக்கு தான்) சொல்லி பயமுறுத்தி இருப்பாங்க. எவ்வளோ வயதானாலும் அந்த பயம் நம்மள விட்டுப் போகாது.

இத எதுக்கு இப்போ சொல்றேன்னா, நம்ம குழந்தைகள பக்கத்துல வெச்சுகிட்டு எப்பவும் எதுக்காகவும் எந்த ஒரு sensitive விஷயங்களையும் பேசவே கூடாது. நமக்கு ரொம்ப சாதரணமா தெரியற விஷயம் அவங்களுக்கு ரொம்ப பெரிய, பயமுறுத்துற விஷயமா தெரியலாம்.
குழந்தைங்க எதுக்கு பயப்படுறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு அந்த பயத்த போக்கறதுக்கு முயற்சி பண்ணணும். எக்காரணத்தை கொண்டும் அத சொல்லி குழந்தைகளை மிரட்டாதிங்க. ஏன்னா... சின்ன வயசுல ஏற்படுற இது போன்ற சில பயங்கள் நம்ம வாழ்க்கை முழுதுக்குமே நம்மல விட்டுப் போகாது. so... தெரியாம கூட அதை என்னைக்குமே நம்ம குழந்தைகள் மனசுல விதைச்சுட கூடாது... அப்படியே குழந்தைங்க எதுக்காவது ரொம்ப பயந்தாங்கன்னா, அந்த பயத்தை களைய வேண்டிய பொறுப்பும் நம்முடையதுதான்... இது அட்வைஸ் இல்லைங்க என்னோட kind request...!

Tuesday, July 29, 2014

மருமகள் அல்ல, அவள் இனி, இன்னொரு மகள்!

வேலைக்குச் செல்லும் திருமணமான புதுமணப் பெண்களே இது உங்களுக்கே உங்களுக்காக...
முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால், நீ இதை கற்றுக் கொள், அதை தெரிந்து கொள், அப்போது தான் புகுந்த வீட்டில் நல்ல பேர் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை, பெண்ணாக இருந்தாலும் பையனாக இருந்தாலும் "நல்லா படித்து பெரிய வேலைக்கு போ" என்பது மட்டுமே பெற்றோர் ஓதும் மந்திரமாக மாறிவிட்டது.
வாழ்வதற்காக "படிப்பும் வேலையும்" இருந்த காலம் போய் இவ்விரண்டிற்காக மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதையே நம் பிள்ளைகள் வாழ்க்கைக்குள்ளும் திணிக்கிறோம்.
இவ்வாறே வளர்க்கப்படுகின்ற பெண் குழந்தைகள் (ஆண் பிள்ளைகளைப் பற்றி அடுத்த blog-ல்...) தங்கள் படிப்பிலும் வேலையிலும் மிக சிறப்பாக முன்னேறுகிறார்கள். இதனால் மற்ற விஷயங்களை கற்கும் ஆர்வம் குறைய, சமையலும், வீட்டில் நமக்கான வேலைகளும் என்ன என்றே தெரியாமல் போய்விடுகிறது.
இப்படி படிப்பும் நல்ல வேலையும் தவிர வேறு எதையும் கற்று வளராத பெண்களுக்கு, திருமணம் நடந்த பின்புதான் வாழ்கையின் தேவைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
திருமணம் முடிந்தவுடனேயே  மாபிள்ளையும் பெண்ணும் தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் கஷ்டம் என்னவென்றால் நிறைய பெண்களுக்கு இன்னும் அவர்களை கட்டிக்கொடுத்த சொந்த ஊர், வீடு, எங்கிருக்கின்றது என்றே தெரிவதில்லை. அங்கே நமக்கான வேலைகள் நமக்கென்று காத்திருக்க, புதிய வேலைகளும் குடும்ப சூழலும் புரியாத பெண்கள் அதை சமாளிக்க ஒரு உத்தியை கையாள்கின்றனர். அதுதான் உதவிக்கென்று தங்கள் பெற்றோரை அல்லது அம்மாவை மட்டும் உடன் அழைத்துச் செல்வது.
மாமியாருக்கு ஒரு பெண் இருந்தால் அவர் தன் மகள் வீட்டில் உதவிக்கு இருப்பார், எந்த பிரச்னையும் இருக்காது. அனால் ஒரே மகனாகவோ, அல்லது மகன்களை மட்டுமே பெற்ற மாமியாருக்கு தான் கஷ்டம் வருகிறது (அல்லது மாமியாரால் கஷ்டம் வருகிறது). அப்போதும் விட்டுக் கொடுக்கும் (மிக) சில மாமியார்கள் பேரப் பிள்ளைகள் பிறந்தவுடன், உரிமை/பாசம் ஈர்த்திழுக்க ஓடி வருகிறார்கள். பிறகு அம்மா கொஞ்ச காலம் மாமியார் கொஞ்ச காலம் என ஷிப்ட போட்டுக்கொள்கிறார்கள்.
இப்போதுதான் மாமியாரோடு பழகி அறியாத மருமகளுக்கு பிரச்னை உருவாகிறது. சமையல் செய்யாத மருமகளை மாமியார் ஜாடை மாடையில் திட்ட, நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் வாங்கும் மருமகளுக்கு கோபம் வர பிரச்னை முற்றுகிறது.
இப்போதைய நிலைமாறும் நிகழ்காலத்தில் (transition period) இதுதான் பெரும்பாலான (புரிதலற்ற) குடும்பங்களின் நிலைமை. இன்னும் சில காலம் போனால் ஒரு வேலை, முழுமையாக எல்லா வேலைகளையும் (வீடு/ஆபீஸ்) கணவன்-மனைவி இருவருமே புரிந்துணர்வோடு பகிர்ந்து செய்து கொள்ளலாம். அப்போது மாமியார்-மருமகள் உறவில் தோழமையோடு கூடிய அந்யோன்யம் இருக்கும். இந்த மாதிரி சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். அல்லது பெண்னின் பெற்றோர் மகளோடும் மருமகனோடும் சேர்ந்து வாழக்கூடிய மாற்றங்கள் நிகழலாம்.
எது எப்படி இருந்தாலும் இப்போதைக்கு இந்த  போன்ற விஷயங்களை சமாளிக்க புதிய மாமியாரோடு நல்லுறவும் தோழமையும் ஏற்படுத்திக்கொள்ள புது மருமகள்களுக்கு இதோ சில யோசனைகள்...

  • மாமியார் கூட முதல்ல ஒரு ஜாலி பேச்சை ஆரம்பிக்க, உங்க கணவரோட நல்ல குணங்களை கண்டு கொள்ளுங்க. அவற்றை எல்லாம்  உங்கள் மாமியாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது நீங்கள் இருவரும் தடையற்று பேச உதவும் மிக நல்ல topic. அப்படியே கொஞ்சம் கூட மாட சமையலுக்கு உதவுனிங்கன்னா, அப்புறம் நீங்க தான் பெஸ்ட் மருமகள் ஆகிடுவிங்க.
  • மாமியாரிடம் கணவரின் சிறு வயதுக் குறும்புகளின் கதைகளைக் கேளுங்கள். சுவாரசியமாக அதே சமயம் உங்கள் கணவரைப் பற்றி அறிய இது நல்ல வாய்ப்பு. நல்ல விஷயங்கள் மாட்டினால் அதை வைத்து கணவரை ஓட ஓட ஓட்டலாம்... :-)
  • உங்கள் மாமியாரின் சமையல் சூப்பரோ சூப்பர் என்று சொல்லுங்கள். பொதுவாகவே அனுபவசாலிகளான அவர்களின் சமையல் சூப்பராகத்தான் இருக்கும், அதை வாய் விட்டு (வேண்டுமானால் கொஞ்சம் மிகைப்படுத்தி ) கூறுங்கள்.
  • வெளியில் சென்று வந்தால் பூ வாங்கி கொடுப்பது, சின்னைச்சின்ன பரிசுகள் (கணவனுக்கு கொடுக்கிறிர்களோ இல்லையோ மாமியாருக்கு கட்டாயமாக கொடுங்கள்) கொடுப்பது, மொட்டுப்பூ வாங்கி மாமியாரை தொடுத்து தர சொல்லி நீங்கள் சூடிக்கொள்வது, அத்தைக்கு பிடித்த கலர் அறிந்து, அந்த கலரில் surprise சாரி வாங்கிக் கொடுப்பது என அசத்துங்கள்.
  • உங்கள் மாமியார் கொஞ்சம் படித்தவர் என்றால் கம்ப்யூட்டர், கேம்ஸ் கற்று கொடுங்கள்.
  • மாமியாரை அசுத்துவதற்காகவே அப்பபோ (ஏன் என்றால் வேலைக்கு போகும் பெண்களுக்கு எல்லா நாளும் வீட்டு வேலைகள் செய்வது கொஞ்சம் கடினம் தான்) புதிதாக சமைத்துக் கொடுங்கள். உங்களுக்கும் ஜாலியா இருக்கும், அவங்களுக்கும் உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

இது எல்லாமே உரிமை கலந்த அன்புப் பரிமாற்றங்கள். இப்படி இருந்தால் முதலில் பயத்தோடு ஆரம்பித்தாலும் போகப்போக உண்மையான தாய்-சேய் அன்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டு, மிக அற்புதமான தோழிகள் ஆகிவிடுவீர்கள் இருவரும்.
அம்மா மகள் உறவைக் காட்டிலும் தித்திப்பானது மாமியார் மருமகள் உறவு, அது சரியாக அமைந்தால்...
மாமியார்களுக்கும் சில டிப்ஸ் இங்கே...!!!

Monday, July 28, 2014

ஆட்டுக்குட்டி

எங்கள் கிராமம் குக்கிராமம் என்று சொல்வோமே, அது போலத்தான் இருக்கும். சினிமாவில் காட்டுவது போல அப்டியே பச்சை பசேல்னு எல்லாம் இருக்காது. சில சமயம் மழை பெய்யும், கிணற்றில் தண்ணி இருக்கும், நிலத்துல வெள்ளாமையும் இருக்கும். 
நான் சின்னதுல இருந்தே எங்க (அம்மாவை பெத்த) தாத்தா வீட்ல தான் வளந்தேன். எங்க வீட்ல ஆடு, எருமை, மாடு, கோழி, நாய்னு வீட்ல வளர்த்துகிற எல்லாமே இருக்கும். அப்போலாம் என் நண்பர்கள்னா அது என் பாப்பு, நிம்மி, மண்டையன் (இதெல்லாம் என்னோட அட்டுகுட்டிகளின் பேரு :-) ) அப்புறம் என் நாய் குட்டி ஜூலி (ஜூலியோட கதை அடுத்த ப்ளாக் ல சொல்றேன்) . தினமும் என் பாப்பு என் கூடத்தான் கட்டிலில் படுத்திருக்கும் (காலையில் பார்த்தால் ஜமுக்காளத்தில் ஒரே ஆட்டாம்புளுக்கையாக இருக்கும். ஏம்புள்ள இப்டி பண்றன்னு எங்க ஆயாவும் திட்டி பார்த்து சலித்து போய் விட்டுடாங்க. அப்புறம் பார்த்தா எங்க ஆயாவும் நிம்மியும் அவ்ளோ friends ஆகிடாங்க. நிம்மி ஆட்டுக்குட்டி என்ன கண்டுக்காம எங்க ஆயா கட்டில்ல தான் படுத்திருக்கும். 
தினமும் சாயுங்காலம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஆடு மேய்க்க ஓடைக்கு ஓட்டிட்டு போய்டுவோம், செம ஜாலியா இருக்கும். ஓடைன்னா அதுல தண்ணி முன்னால எப்போவாச்சும் ஓடுச்சானு தெரியல, அதைத்தான் பொது தடமா ஒவ்வொருத்தர் காட்டுக்கும் (காடு என்பது ஒவ்வொருத்தர் வீடு+நிலம் மொத்தம் சேர்த்து அவங்க காடு இவங்க காடு என்று அவங்கவங்க பட்ட பேர் சேர்த்து சொல்வோம்) போற வழித்தடமா பயன்படுத்துவாங்க. எங்க ஆட்டுகுட்டிகல்லாம் "பாப்பு இங்க வான்னா" எல்லா என்கிட்டே ஓடி வரும். புதர்ல இருக்க கொடி, தலைலாம் பிச்சு போட்டா சூப்பரா சாப்ட்டுட்டு என் கூடயே சுத்திடிருக்கும். எனக்கு அப்போல்லாம் அதுல ஒரு பெருமை, சந்தோசம்... என்னமோ ஒரு நூறு பேரு என் பேச்சி கேட்டு என் பின்னால வர மாதிரி... ஸ்கூலுக்கு போனா இந்த ஆட்டுக்குட்டி கதைதான் ஓடும். 
ஆனா எது எப்படி இருந்தாலும் "ஆடு அறுக்கறவனதான் நம்பும்"னு சொல்ற மாதிரி, எதாவது நோம்பி நொடின்னு வந்தா உடனே இந்த ஆடுங்கள விலை பேசி வித்துருவாங்க. இப்போ புரியுது இதெலாம் நாம வளக்கறதே இப்டி விக்கறதுகாகதான்னு. அப்போ ஒவ்வொரு முறையும் அப்படி அழுது கத்துவேன், டிவிஎஸ் 50 இல்லனா சைக்கிள் லதான் கால கட்டி தொங்க போட்டு தூக்கிட்டு போவாங்க. வண்டி பின்னாடியே ஓடுவேன், நாலைந்து நாள் சாப்பிடாம பாப்பு பாப்புனு அழுதுட்டே கிடப்பேன். அப்புறம் மறுபடியும் இருக்குற குட்டிகளுக்கு பேரு வைப்பேன், ஒன்னாவே கூடவே கூட்டிட்டு சுத்திட்டிருப்பேன். 
இப்படி வளர்ந்த என்னால என் குழந்தைக்கு ஒரு ஆட்டுகுட்டியோ, நாய் குட்டியோ காட்ட முடியவில்லை (இப்போ இருப்பது அமெரிக்காவில்), அவனை பொறுத்த வரை ஆட்டுக்குட்டி என்பது carton rhymes-ல் வருவது தான் நிஜம். உண்மையான ஆட்டையோ மாட்டையோ காட்டினால் கூட அவனுக்கு தெரிவதில்லை.
இன்று என் இரண்டு வயது பையனுக்கு எல்லாமே தெரிகிறது "Tablet" தான் அவனுடைய ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, எல்லாமுமாகிவிட்டது ... அவனுடைய அப்பாவித்தனமான அந்த இரண்டு வயது குழந்தைத் தனம் மிஸ்ஸாகி ஏதோ ஸ்கூல் பையன் மேசுரிட்டி இப்போதே வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு... 
சரி போகட்டும், ஒரு நாள் நிச்சயமா அவனும் ஆட்டுக்குட்டியும் கன்னுக்குட்டியும் தொரத்திகிட்டு பின்னால் சுற்றுவான், கோழிங்களோடு கொஞ்சி, நாய் குட்டியோடு புரண்டு, அரை டௌவ்சர் போட்டுக்கிட்டடு, பெரிய சைக்கிள் தள்ளி, மா மரக்கிளையில் கார் ஓட்டி, தென்னை மரம் வழுக்களோடு ஏறக்கற்று, புழுதியில விளையாடி (ஏன்னா இப்போல்லாம் தண்ணி பஞ்சத்துல நிறைய வயல் ஓட்டி போட்டு சும்மா புழுதியா தான் கிடக்குது) வயலும் வயல் சார்ந்த வாழ்கையுமாக வாழ்வதற்காகவே திரும்பவும் எங்கள் கிராமத்திற்கே சென்று சொந்தங்களோடும் பந்தங்கோளோடும் கூடிக்கொழவி வாழ வேண்டும் என்று திடமாக எழும் ஆவலோடு...  
Related Posts Plugin for WordPress, Blogger...